பதிவு செய்த நாள்
26 ஏப்2013
01:38
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசி அரை மணி நேரத்தில், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இதையடுத்து, "சென்செக்ஸ்' 1.19 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்ககூடும் என்ற எதிர்பார்ப்பும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு 2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 0.1 சதவீதம் என்ற குறைந்த அளவில் தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையிலும், கடந்த இரு தினங்களாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.
நேற்றைய பங்கு வர்த்தகத்தில், மருந்து, வங்கி, வாகனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 227.49 புள்ளிகள் அதிகரித்து, 19,406.85 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,434.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,192.11 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங் களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 79.40 புள்ளிகள் உயர்ந்து, 5,916,30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,924.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக,5853.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|