பதிவு செய்த நாள்
26 ஏப்2013
01:47
புதுடில்லி:இந்தியா - வங்கதேசம் இடையே கடல் வழி சரக்கு போக்குவரத்தின் சோதனை ஓட்டம், வரும் மே மாதம் நடைபெற உள்ளது.இரு நாடுகளும், பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்த, கடல் வழிகளை திறந்து விடுவது என, கொள்கை அளவில் முடிவு செய்துள்ளன. எனினும், இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையொப்பமாகவில்லை.
ஏற்றுமதி மதிப்பு:கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, வங்க தேசத்திற்கு, 470 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளது. இதே காலத்தில், வங்கதேசத்தில் இருந்து, 49.80 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை, இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது.இந்தியாவின் ஏற்றுமதியில் பலதரப்பட்ட பொருட்கள் அடங்கியுள்ளன. அதே சமயம், வங்கதேசம், வேளாண் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே, நேரடி கடல் வழி சரக்கு போக்குவரத்திற்கான ஒப்பந்தம் இல்லை. அதனால், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்கள் வழியாகவே, இரு தரப்பு நாடுகளின் பரஸ்பர கடல் வழி வர்த்தகம் நடைபெறுகிறது.இதனால், இரு நாடுகளுக்கும், கடல் வழி சார்ந்த சரக்கு போக்குவரத்து செலவினம் அதிகமாக உள்ளது. தற்போது, இரு நாடுகளும், மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு, சாலை வழியாக சரக்கு போக்கு வரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்த செலவினத்தை குறைக்கும் நோக்கில், இரு நாடுகளும் கடலோர சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. எனினும், பெரிய கப்பல்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வது, ஆதாயமற்றதாக இருக்கும் என்பதால், சிறிய கப்பல்களில் ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று துறைமுகங்கள்:இதற்காக, இரு நாடுகளும் தலா, மூன்று துறைமுகங்களை அடையாளம் கண்டுள்ளன. வங்கதேசத்தில், சிட்டகாங், மோங்லா மற்றும் பன்கான் துறைமுகங்களும், இந்தியாவில், பரதீப், விசாகப்பட்டினம் மற்றும் ஹால்டியா துறைமுகங்களும், பரஸ்பர கடல் வழி சரக்கு போக்குவரத்து முனையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியா - வங்கதேசம் இடையே நேரடி கடல் வழி போக்குவரத்து மேற்கொள்வது குறித்து, இரு நாடுகளிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பெரிய கப்பல்களில் சரக்கு போக்குவரத்து மேற்கொள்வது, வர்த்தக ரீதியில் லாபகரமாக இருக்காது என, கருதப்படுவதால், சிறிய கப்பல்களில் போக்குவரத்து மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், வரும் மே மாதம் நடைபெறும் என, தெரிகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இந்தியா - வங்கதேசம் இடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளும் சுங்க வரியை குறைத்து உள்ளன.இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோன்று, அந்நாட்டிற்கு, இந்தியாவில் இருந்தும், அதிக அளவில் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் உள்ள பெட்ரோபோல் என்னுமிடத்தில், இரு நாடுகளின் சுங்கச் சாவடி அமைந்துள் ளது.
சாலை போக்குவரத்து:இரு நாடுகளின் சாலை வழியிலான மொத்த சரக்கு போக்குவரத்தில், 50 சதவீதம், பெட்ரோபோல் மூலமாக நடைபெறுகிறது. இப்பகுதியில் நெரிசல் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.மேலும், போதுமான சாலை வசதிகளோ, இணைப்புச் சாலைகளோ இல்லாததால், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்தும் வாய்ப்பு குறைவாக உள்ளது.இந்த பிரச்னைக்கு, கடல் வழி போக்குவரத்து தீர்வாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|