பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:42
புதுடில்லி:நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.96 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அளவான, 6.8 சதவீதத்தைவிட குறைவாகும்.இதை கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி வரும், மே மாதம் 3ம் தேதி அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் மாதம், "ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 7.5 சதவீதமாக நிர்ணயித்தது. இதையடுத்து, "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம், 6.5 சதவீதமாக குறைந்தது. அதே சமயம், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டது.கடந்த, 2012-13 ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக சரிவடைந்தது. சென்ற நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும், பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது.
எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|