பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:46
மும்பை:சீனாவின் மலிவு விலை பொம்மைகள், இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளின் பொம்மை விற்பனையாளர்களையும் கதி கலங்கச் செய்து உள்ளன.
மின்னணு தொழில்நுட்பம்: சீனாவின் பெரும்பாலான பொம்மைகள், மின்னணு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. உலகில், இவ்வகை பொம்மைகள் உற்பத்தியில், சீனாவின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.இதனால், சர்வதேச சந்தையில் சீன பொம்மைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், குறைந்த விலை, கவர்ச்சியான விளம்பரம் உள்ளிட்டவை காரணமாகவும், சீன பொம்மைகள், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு கடும் போட்டியாக விளங்குகின்றன.
போட்டி:இந்தியாவில், மரம், பிளாஸ்டிக் மற்றும் மென்மையான பொம்மைகள், அட்டை விளையாட்டுகள் போன்றவை தான் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.சீனாவின் போட்டியை சமாளிக்க, இந்திய பொம்மை நிறுவனங்கள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறைந்த விலை நிர்ணயம், பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, புதுமையான விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம், பொம்மை விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
உதாரணமாக, சிம்பா இந்தியா நிறுவனம், பிரத்யேக உரிமம் பெற்று, "கார்ஸ் 2' ஆங்கில திரைப்படத்தில் வரும் கார் போன்ற பொம்மையை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.டிரீம் தியேட்டர் நிறுவனம், பிரபல வீடியோ விளையாட்டுகளின் அடிப்படையில், ஆங்ரி பேர்டு, பவர் ரேஞ்சர், குங்பூ பாண்டா உள்ளிட்ட பொம்மைகளை சந்தைப் படுத்தியுள்ளது. இந்நிறுவனம், அதன் ஆங்ரி பேர்டு பொம்மை விற்பனைக்காக, பேட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள பேட்டா காலணி கடைகளில், ஆங்ரி பேர்டு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சில்லரை விற்பனை:இதுபோன்று, டிஸ்னி இந்தியா நிறுவனமும், கூட்டு முயற்சியில், அதன் பொம்மைகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது போன்ற வணிக செயல்பாடுகளால், பிரத்யேக பொம்மை கடைகள் மட்டுமின்றி, இதர பல்வேறு பொருட்களின் சில்லரை விற்பனை கடைகளிலும், பொம்மைகள் கிடைக்கும் நிலை உருவாகி வருகிறது.இதுகுறித்து இத்துறையை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "சீன பொம்மைகளின் விலை மட்டுமின்றி, அவற்றின் தரமும் குறைவாகவே உள்ளது.
இந்திய பொம்மைகள்:ஆனால், இந்திய பொம்மைகளின் தரம் உயர்வாக உள்ளது. மேலும், பிராண்டு பெயரில், பலதரப்பட்ட சில்லரை விற்பனை கடைகளிலும் இவை கிடைப்பதால், விற்பனையும் அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு, தற்போது 7,500 கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2015ம் ஆண்டு, 13 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, "அசோசெம்' மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|