பதிவு செய்த நாள்
27 ஏப்2013
00:50
புதுடில்லி:கடந்த, 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள் ஈட்டிய வருவாய், 18.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 34.8 சதவீதமாகும் என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
ரொக்க இருப்பு:அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசுக்கு சொந்தமான, பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் வைத்து உள்ள, ரொக்க இருப்பு, 2.80 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.இத்தொகையை கொண்டு, இந்நிறுவனங்கள் சிறப்பான அளவில் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.பொதுத் துறை நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்களின் தொழில்நுட்ப கூட்டுடன் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அன்னிய முதலீடுகளை கவரும் வகையில் திட்டங்களை மேற்கொள்ள வேண் டும்.
பொதுத் துறையை சேர்ந்த, 50 நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் தகுதியுடன், பல நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் இருந்து, நிதி திரட்டிக் கொள்வதுடன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவதன் வாயிலாக, பல நன்மைகளை பெற முடியும்.கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், பொதுத் துறையை சேர்ந்த, 260 நிறுவனங்கள், 7.30 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.கணக்கீட்டு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களின், ஏற்றுமதி வருவாய், 1.20 லட்சம் கோடியாக இருந்தது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 8.5 சதவீதமாகும்.
வருவாய்:லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாக, மத்திய அரசுக்கு, 1.60 லட்சம் கோடி ரூபாய் வருவாய் (டிவிடெண்டு, வரி, வட்டி வருவாய் உள்ளிட்ட இனங்கள்) கிடைக்கிறது. இது மத்திய அரசின் மொத்த வருவாயில், 21.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இருப்பினும், பொதுத் துறையில், 66 நிறுவனங்கள் நலிவுஅடைந்த நிலையில் உள்ளன. இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. என்றாலும், நலிவடைந்த நிறுவனங்களை சீரமைத்து, மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி:நாட்டின் பொருளாதாரம், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், மீண்டும் 7 - 8 சதவீத வளர்ச்சியை எட்டும்.பொருளாதாரத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவதற்கான, இந்தியாவின் நிலைப்பாடு, சாதகமான பயன்களை அளித்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம், ஆண்டுக்கு சராசரியாக, 7.9 சதவீத வளர்ச்சியை கண்டு உள்ளது.
ஆனால், இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில் மட்டும், 5 சதவீதமாக குறைந்துள்ளது.மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், இந்தியா மீண்டும் 7 முதல் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|