பதிவு செய்த நாள்
27 ஏப்2013
01:09
புதுடில்லி:இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அதன் இறக்குமதியும் சரிவடைந்து உள்ளது.எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான வசதிகளில் காணப்படும் குறைபாடு, எரிவாயுவை கொண்டு செல்ல, போதுமான குழாய்கள் இல்லாதது போன்றவற்றால், அதன் இறக்குமதி குறைந்துள்ளது. அதேசமயம், எரிவாயு விலை நிர்ணயம் குறித்த பிரச்னை காரணமாக, உள்நாட்டில், இத்துறை நிறுவனங்கள், எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன. பயன்பாடு:அதே சமயம், மின் துறை நிறுவனங்கள், மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்பதால், விலை அதிகம் கொண்ட எரிவாயுவை வாங்க தயங்குகின்றன. உற்பத்திக்கும், பயன்பாட்டிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க, எரிவாயுவை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு, நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு, நாளொன்றுக்கு, 16 கோடி கன அடி என்ற அளவில் இருந்தது. இதில், 50 சதவீத பயன்பாடு, இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்பட்டுள்ளது. கோதாவரி படுகை:மதிப்பீட்டு ஆண்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி 317 கோடி கன மீட்டராக இருந்தது. இது இதற்கு முந்தைய 2011-12-ம் நிதியாண்டில் 355 கோடி கன மீட்டராக காணப்பட்டது.கிழக்கு கோதாவரி படுகை பகுதிகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உற்பத்தி குறைந்ததை அடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டில், உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 14.5 சதவீதம் சரிவடைந்து, 4,067 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இதே காலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 'டீ6' எண்ணெய் வயலில், எரிவாயு உற்பத்தி, 17.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.இந்த எண்ணெய் வயலில், கடந்த 2009ம் ஆண்டு இறுதியில், அதிகபட்சமாக, நாளொன்றுக்கு, 6 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டது.இது, தற்போது, 1.50 கோடி கன மீட்டராக குறைந்து விட்டது. வரும் 2015-16ம் நிதியாண்டு வரை, இதே நிலை தொடரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. பங்களிப்பு:நாட்டின் எரிசக்தி தேவையில், திரவ இயற்கை எரிவாயு அல்லது இறக்குமதியாகும் எரிவாயு, முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால், அவற்றின் விலை அதிகம் என்பதால், தேவைப்பாடும் குறைவாக உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.இறக்குமதி செய்யப்படுவதை விட, உள்நாட்டில்,விலை குறைந்த, திரவ இயற்கை எரிவாயுவிற்கான தேவை அதிகரித்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு, இவ்வகை எரிவாயு உற்பத்தி, மறுவாயு சுத்திகரிப்பு திட்டங்களில், பல நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டு வருகின்றன. ஆனால், எரிவாயு கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், அரசின் கொள்கை தெளிவாக இல்லாத நிலை உள்ளது. கொள்கை:இதில் நிலையான கொள்கையை அரசு அறிவித்தால், மேலும் பல நிறுவனங்கள், திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் அது சார்ந்த பணிகளில் களமிறங்க வாய்ப்புள்ளது.இதனிடையே, உள்நாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்துள்ளது. சென்ற 2012-13ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 0.6 சதவீதம் குறைந்து, 3.78 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.இதே ஆண்டில், கச்சா எண்ணெய்க்கான தேவை, 14.81 கோடி டன்னில் இருந்து, 15.50 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.எண்ணெய் சுத்திகரிப்பில் பொதுத் துறையை சேர்ந்த, 18 நிறுவனங்களும், தனியார் துறையை சேர்ந்த 2 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஆக, இந்த 20 நிறுவனங்கள், சென்ற நிதியாண்டில்,18.44 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|