பதிவு செய்த நாள்
28 ஏப்2013
00:50
தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், சென்ற 2012ம் ஆண்டில், மாநில சுற்றுலா துறை, 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலமாக, மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், தமிழ்நாடு உள்ளது.வெளிநாட்டு பயணிகள்:சென்ற ஆண்டு, தமிழகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 18.76 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, முறையே, 18.40 கோடி மற்றும் 35 லட்சம் என்ற அளவில் உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண வந்தோரின் எண்ணிக்கை, 14 கோடி என்ற அளவில் இருந்தது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, முறையே, 13.60 கோடி மற்றும் 33 லட்சம் என்ற அளவில் உள்ளது.தமிழகத்தில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பல்வேறு செயல்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு :மேலும், அயல்நாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், சுற்றுலா தலங்களுக்கான அணுகு சாலை, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது.இத்துடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தமிழகத்தின் முக்கிய திருத்தலங்கள், நீர்வீழ்ச்சிகள், தொன்மை வாய்ந்த இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா பயணமும் மேற்கொள்ளப்படுகிறது.இது போன்ற செயல்பாடுகளால், உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அயல்நாட்டினரும், தமிழகத்திற்கு சுற்றுலா வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இவை தவிர, ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன், 500 கோடி ரூபாய் மதிப்பிலான, சுற்றுலா மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, சுற்றுலா துறை அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன் கூறியதாவது: அதிகம் செலவழிக்கும் திறன் கொண்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், புதிய சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.இது, சுற்றுலா தலங்களில், உள்ளூர் மக்கள் வளர்ச்சி காணவும், வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் வேலை வாய்ப்பு பெறவும், துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
பங்களிப்பு:தமிழக அரசு, "2023ம் ஆண்டு தொலைநோக்கு கொள்கை' என்ற திட்டத்தின் கீழ், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மேம்பாட்டிற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என, மதிப்பிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், மேற்கண்ட துறைகளில் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.இதையடுத்து, வரும் 2023ம் ஆண்டு, தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 1.50 கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா துறை, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், முன்னுரிமை அடிப்படையில், இரு பிரிவுகளின் கீழ், சுற்றுலாத் துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.இதன்படி, புனித தலங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களைக் கொண்ட கிழக்கு கடற்கரை பகுதியில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.வழிபாட்டு தலங்கள்:அதுபோன்று, வழிபாட்டு தலங்கள் மற்றும் இயற்கையான சுற்றுச்சூழலைக் கொண்ட, தமிழக தென்பகுதிகளில், சுற்றுலா துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில், காஞ்சிபுரம், கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகியவை அடங்கும். மேலும், திருக்கோவிலூரிலும், சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.தென் தமிழகத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், உதகமண்டலம் ஆகியவற்றில், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|