பதிவு செய்த நாள்
29 ஏப்2013
00:40
சேலம்:மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு மாதுளை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், இதன் விலை சரிவடைந்துள்ளது.தமிழகத்துக்கு தேவையான மாதுளை பழங்கள், மகாராஷ்டிர மாநிலம், சாங்கோலா, கர்நாடக மாநிலம், ஹீலியூர் ஆகிய இடங்களில் இருந்தே வரும். ஜூலை மாதத்தில் துவங்கி, அக்டோபர் வரை சீசன் இருக்கும். நடப்பாண்டில், இரண்டு மாதங்களுக்கு முன்னரே சீசன் துவங்கி விட்டது.
தற்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் மாதுளை பழங்கள், தமிழகத்துக்கு விற்பனைக்கு வருகின்றன.கடந்த வாரம் வரை, சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களுக்கு தினந்தோறும், 50 டன் மாதுளை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.தற்போது தினந்தோறும், 150 டன் வரை மாதுளை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் மாதுளை பழங்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம், 10 கிலோ எடை கொண்ட முதல் ரக மாதுளை பழ பெட்டி, 1,500 வரையிலும், இரண்டாம் ரகம், 1,200 முதல் 1,300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, முதல் ரக பெட்டி, 900 முதல், 1,000 ரூபாய் வரையிலும், இரண்டாம் ரக பெட்டி, 500 முதல், 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.மொத்த விலையில் சரிவு ஏற்பட்டதால், சில்லரை விலையில் முதல் ரகம் கிலோ, 100 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்ட மாங்காய் மற்றும் பழ வியாபாரிகள் சங்கத்தின் துணை செயலர் சேஷா கூறியதாவது:முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வியாபாரிகளே எதிர்பார்க்காத நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து, தரமான மாதுளை பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. இதனால், மாதுளை பழங்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.அதிக நீர்ச்சத்து, ஊட்டச்சத்து மிக்க பழங்கள் என்பதால், பழப்பிரியர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|