பதிவு செய்த நாள்
03 மே2013
01:03
மும்பை:கடந்த ஆறு ஆண்டுகளில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், குறைந்த சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு குறைந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மார்ச் இறுதி முதல், நடப்பாண்டு, மார்ச் 31ம் தேதி வரை, மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீட்டில் இடம்பெற்றுள்ளவற்றுள், 28 நிறுவனப் பங்குகள் மீதான, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' குறியீட்டில் அடங்கிஉள்ளவற்றுள், 46 நிறுவன பங்குகள் மீதான, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 19.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், சிறிய அளவில் சந்தை மதிப்பை கொண்டுள்ள, 275 நிறுவனப் பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 6.8 சதவீதம் சரிவடைந்து உள்ளது.சென்ற 2012ம் ஆண்டு, 'சென்செக்ஸ்', 25.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நடப்பாண்டு, தற்போது வரை, 0.1 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பாண்டு, தற்போதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 1,060 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 2,450 கோடி டாலராக இருந்தது.
சென்ற ஜனவரி மற்றும் பிப்ரவரியில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவன பங்குகளில், முறையே, தலா, 410 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற மார்ச்சில், 50 சதவீதம் குறைந்து, 210 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.நடப்பு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 22.17 கோடி டாலரை, இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.
பங்குச் சந்தையில், சிறிய நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம் குறைவாக உள்ளது. மேலும், நிர்வாகத் திறன் குறித்த அச்சமும், ஒளிவுமறைவான செயல்பாடுகளும், அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தடைக் கற்களாக உள்ளன என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|