பதிவு செய்த நாள்
03 மே2013
01:07
மும்பை:சென்னையில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகங்களில், பொருட்கள் வாங்குவதற்கும், உணவு உண்பதற்கும், திரைப்படங்களை கண்டு களிப்பதற்கும் வரும், மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
திரையரங்கம்:இதையடுத்து, பல்வேறு வணிக வளாகங்களில், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவ்விடங்களில், பலதரப்பட்ட விற்பனை மையங்கள் துவக்கப்பட்டு வருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.ஒரு வணிக வளாகத்திற்கு சென்றால், உப்பு முதல் வாகனம் வரை வாங்கவும், உணவகங்களில் உண்ணவும், பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்கவும்; திரைப்படம் பார்க்கவும், பல வசதிகள் உள்ளன.
தற்போது திறக்கப்படும் அனைத்து வணிக வளாகங்களிலும், குறைந்தபட்சம், 5 சிறிய திரையரங்குகளாவது உள்ளன.
ஆனால், சென்னையில் உள்ள பல பாரம்பரிய வணிக வளாகங்களில், சிறிய திரையரங்குகள் கிடையாது. இந்தவகையில், இவற்றுக்கு, புதிய வணிக வளாகங்கள் கடும் போட்டியாக உருவெடுத்து வருகின்றன.இதையடுத்து, ஒரு சில பாரம்பரிய வணிக வளாகங்கள் புதுப்பொலிவு பெறத் துவங்கியுள்ளன. கவர்ச்சியான வடிவமைப்புடன் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் பயனாக, இவ்வகை வணிக வளாகங்களில், புதிய வர்த்தக அங்காடிகள் முளைக்கத் துவங்கியுள்ளன. காலி அறைகளின் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது.
சென்னையின் ஒட்டுமொத்த வணிக வளாகங்களில், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை, 15.8 சதவீதமாக குறைந்துள்ளது.
நடப்பாண்டில்,சென்ற மார்ச் வரையிலான காலாண்டில், சென்னை வணிக வளாகங்களில் உள்ள காலியிடம், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 2 சதவீதம் குறைந்து, 6.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது என, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே காலாண்டில், சென்னையின் ஒட்டுமொத்த வணிக வளாக பரப்பளவில், 10 லட்சம் சதுர அடி பரப்பு அதிகரித்துள்ளது.
சென்னை, வேளச்சேரியில், மேற்கண்ட பரப்பளவில், திறக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில், கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் நிரம்பி விட்டன.பிரஸ்டீஜ் குழுமம், அண்மையில் "போரம் விஜயா' என்ற வணிக வளாகத்தை சென்னையில் திறந்துள்ளது. இங்கு 100 கடைகள், 20க்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பான விற்பனையகங்கள், 850 பேர் அமரக்கூடிய, மிகப் பெரிய உணவுக் கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஐமேக்ஸ்:அதுமட்டுமின்றி, 9 சிறிய திரையரங்குகளும், மிகப் பிரமாண்டமான திரையை கொண்ட, சென்னையின் முதலாவது "ஐமேக்ஸ்' திரையரங்கும் உள்ளது.இது, சென்னையின் மிகப் பெரிய வணிக வளாகம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு, கிட்டத்தட்ட அனைத்து கடைகளும், அவற்றின் விற்பனையை முழுவீச்சில் துவக்கி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வணிக வளாகங்களில், விற்பனை மையங்களை அமைப்பதும், நகரின் முக்கிய பகுதிகளில் அங்காடிகளை அமைப்பதும் லாபகரமானது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால், வாடகை சற்று அதிகமாக இருந்தாலும், குறிப்பட்ட பகுதியில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், வர்த்தக நோக்கம் கொண்டவர்கள் உள்ளனர்.
புறநகர்:குறிப்பாக, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, காதர் நவாஸ்கான் சாலை ஆகிய இடங்களில், அண்மைக்காலமாக, புதிய வணிக கட்டடங்கள் ஏதும் உருவாகாததால், அங்கு வாடகை 4 -5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுபோன்று, வடக்கு உஸ்மான் சாலையில், நகைக் கடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அங்குள்ள கடைகளின் வாடகை, 9 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்னையின் மையப்பகுதி மட்டுமின்றி, வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளிலும், வர்த்தக வளாகங்களை கட்டுவதற்கான இடங்களை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளைத்து போட்டுள்ளன.வரும் ஆண்டுகளில், இங்கு அமைய உள்ள வணிக வளாகங்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|