பதிவு செய்த நாள்
10 மே2013
23:33
சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், கடந்த 2012-13ம் நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 66 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளதாக, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் தெரிவித்தார்.சென்ற நிதியாண்டில், இவ்வங்கியின் மொத்த வணிகம், 2,49,136 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 17.52 சதவீதம் அதிகமாகும்.மேற்கண்ட மொத்த தொகையில், திரட்டப்பட்ட டெபாசிட், 17.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,41,980 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன், 17.52 சதவீதம் உயர்ந்து, 1,07,156 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இருப்பினும், ஓய்வூதியம், பணிக்கொடை, பணியாளர்கள் சம்பள உயர்வு போன்றவற்றிற்காக அதிக தொகையை ஒதுக்கியதை அடுத்து, வங்கியின் செயல்பாட்டு லாபம், 3,463 கோடியிலிருந்து, 3,061 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதையடுத்து, வங்கியின் நிகர லாபமும், 1,747 கோடியிலிருந்து, 1,581 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், இவ்வங்கி, நாடு தழுவிய அளவில், புதிதாக, 143 வங்கி கிளைகளை துவக்கியது. இதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, 2,081 ஆக உயர்ந்துள்ளது. மேற்கண்ட கிளைகள் தவிர, வெளிநாடுகளில், சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் கொழும்பு, யாழ்பாணம் ஆகிய இடங்களில் கிளைகளை துவங்கியுள்ளது.சென்ற நிதியாண்டில், வங்கி வழங்கிய கடனில், மொத்த வசூலாகாத கடன், 3.33 சதவீதமாகவும், நிகர வசூலாகாத கடன், 2.26 சதவீதமாகவும் உள்ளது என, பாசின் மேலும் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|