பதிவு செய்த நாள்
13 மே2013
00:40
புதுடில்லி:மத்திய அரசு, உருக்கு, அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகியவற்றின் கழிவுகளுக்கு, 2.5 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. மேலும், பித்தளை கழிவுகள் மீதான சிறப்பு கூடுதல் சுங்க வரி விலக்குச் சலுகை, திரும்பப் பெறப்பட்டுள்ளது. நடவடிக்கை:பொதுநலன் கருதி, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதல், இறக்குமதியாகும் உருக்கு கழிவுகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட்டில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கழிவு மீதான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டது.இந்நிலையில், உருக்கு மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கழிவுகள் மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க வரியை திரும்பப் பெற வேண்டும் என, உருக்குத் துறை வலியுறுத்தியுள்ளது.வரி விதிப்பால், உருக்கு பொருள்களின் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர் என, உருக்குத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி வரி காரணமாக, உருக்கு கழிவின் விலை, டன்னுக்கு, 600 - 700 ரூபாய் வரை அதிகரிக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை, 1 டன்னுக்கு 2,500 ரூபாய் வரை உயரும்.பித்தளை கழிவு:அதே சமயம், இந்த வரி விதிப்பால், மத்திய அரசுக்கு, 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பித்தளை கழிவை பொறுத்தவரை, அதன் இறக்குமதிக்கு, இனி, 4 சதவீத, சிறப்பு கூடுதல் வரி செலுத்த வேண்டும். இதனால், பித்தளை பொருட்கள் விலை உயரும் என, இத்துறையினர் தெரிவித்தனர்.இந்தியா, ஓராண்டில், சராசரியாக, 70 லட்சம் டன் உருக்கு மற்றும் 10 - 20 லட்சம் டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கழிவுகளை இறக்குமதி செய்து வருகிறது.நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள், உருக்கு கழிவை அதிக அளவில் பயன்படுத்தி, உருக்கு பொருள்களை தயாரிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தியில் (3.20 கோடி டன்), சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|