பதிவு செய்த நாள்
13 மே2013
00:43
நாமக்கல்:முட்டை ஏற்றுமதி குறைந்து உள்ளதால், உள்நாட்டில் அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி.,) விலை நிர்ணயம் செய்கிறது. இக்குழு, முட்டை உற்பத்தி மையங்களை தனித்தனி மண்டலங்களாக பிரித்துள்ளது.
கேரளா:தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவை உள்ளடக்கியதாக, நாமக்கல் முட்டை ஒருங்கிணைப்பு மண்டலம் அமைந்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில், நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில், 70 லட்சம் முட்டைகள் கேரளாவிற்கு செல்கின்றன. 70 லட்சம் முட்டை சத்துணவு திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள், உள்ளூர் விற்பனைக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
தற்போது கோடை விடுமுறை என்பதால், சத்துணவு திட்டத்திற்கு முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும், 70 லட்சம் முட்டைகள் உள்ளூர் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளன.உற்பத்தி அதிகரித்து, தேவை குறைந்துள்ளதால், முட்டை விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில், நாமக்கல் மண்டலத்தின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளது. துபாய், பக்ரைன், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.கடந்த, 2006ம் ஆண்டு, பறவைக் காய்ச்சல் காரணமாக இந்திய முட்டை இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் தடை விதித்தன. பின், தடை நீக்கப்பட்டு ஏற்றுமதி துவங்கியது. இந்நிலையில், மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதியால், இந்திய முட்டைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த தடையால், ஆப்ரிக்க நாடுகளுக்கு மட்டும் குறைந்த அளவிலான முட்டைகளே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, கோழிப்பண்ணையாளர் ஒருவர் கூறியதாவது:இந்திய முட்டை இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடையால், ஏற்றுமதி பாதியாக சரிந்துள்ளது.இறக்குமதிக்கான தடையை விலக்கி கொள்ள வாய்ப்பில்லாத நிலையில். பிப்ரவரி மாதத்தில் மொத்தம், 12 கன்டெய்னர்களில் மட்டுமே முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 54 கன்டெய்னர் வீதம் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி வெகுவாக சரிந்ததால், உள்ளூர் சந்தைகளில் முட்டை வரத்து அதிகரித்து, அதன் விலை குறைய வழி வகுத்துள்ளது.
மூலப்பொருட்கள்:கோழித்தீவன தயாரிப்புக்கு தேவைப்படும் மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை, இரு மடங்காக ஏற்றம் கண்டுள்ளது. இதனால், ஒரு முட்டை உற்பத்தி செய்ய, 315 முதல், 320 காசு வரை செலவாகிறது. இதற்கு மேல் விலை வைத்து, விற்பனை செய்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.ஆனால், உற்பத்தி செலவை விட, குறைந்த விலையில் தற்போது முட்டை விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பண்ணையாளர்கள் நாள்தோறும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இழப்பை ஈடு செய்ய முடியாத பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|