பதிவு செய்த நாள்
14 மே2013
12:42
சென்னை : "அக்ஷய திரிதியை'யான நேற்று ஒரு நாள் மட்டும், சென்னையில், 1,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.நாடு தழுவிய அளவில், நேற்று, "அக்ஷய திரிதியை' கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில் உள்ள அனைத்து நகை கடைகளிலும், பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதலே பெண்களும், அவர்களுக்கு துணையாக கணவரும், அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு, நகை கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
"அக்ஷய திரிதியை'க்காக, தங்கம் வாங்க, சில நாட்களுக்கு முன்பே, பொது மக்கள், கடைகளுக்கு சென்று, தாங்கள் விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணத்தை செலுத்தி, முன்பதிவு செய்து, ரசீது பெற்று வைத்திருந்தனர். இந்த ரசீதை, "அக்ஷய திரிதியை'யான நேற்று, கடையில் கொடுத்து, நகைகளை பெற்று கொண்டனர்.மற்ற நகரங்களை காட்டிலும், சென்னையில், தங்க ஆபரணங்களுக்கான செய்கூலி, சேதாரம் குறைவாக இருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்தும், சென்னை வந்து, மக்கள் தங்கம் வாங்கி சென்றனர். தங்கம் விற்பனைக்கு பெயர் பெற்ற, தி.நகர், பிராட்வே உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மட்டுமல்லாமல், நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளிலும், மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து, தங்க நகை வியாபாரி கூறியதாவது:நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை கொடுத்து, கூடுதல் தொகை செலுத்தி, புதிய நகைகளை வாங்கிச் சென்றனர். சென்னையில், நேற்று முன்தினம், 800 கிலோவாக இருந்த, தங்கம் விற்பனை நேற்று, 1,000 கிலோவாக அதிகரித்தது. நேற்று, விற்பனையான மொத்த தங்க ஆபரணங்களில், முன்பதிவு, பழைய நகைகளை கொடுத்து வாங்கியது ஆகியற்றின் பங்களிப்பே மிகவும் அதிகமாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|