பதிவு செய்த நாள்
17 மே2013
02:00
புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 66.44 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 66.09 கோடியாக இருந்தது. ஆக, ஏப்ரல் மாதத்தில் மட்டும், நாடு தழுவிய அளவில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 35 லட்சம் அதிகரித்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
வோடபோன் நிறுவனம்:அலைபேசி சேவை துறையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், "பிரிப்பெய்டு' பிரிவில் நீண்ட காலம் பயன்படுத்தாத இணைப்புகளை நீக்கியுள்ளன. மேலும், நகர்புறங்களில், அலைபேசி சேவை, உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இந்நிலையிலும், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதிக எண்ணிக்கையில், புதிதாக அலைபேசி வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஏப்ரலில், வோடபோன் நிறுவனம், மிக அதிகபட்சமாக, 14.20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15.37 கோடியாக அதிகரித்துள்ளது.வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம், மீண்டும் அலைபேசி வர்த்தகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளது. இதையடுத்து, சென்ற ஏப்ரலில் மட்டும், இந்நிறுவனம், அதிகபட்சமாக, 6.49 சதவீதம் அல்லது 1.30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது.
பார்தி ஏர்டெல்:ஜி.எஸ்.எம்., அலைபேசி சேவையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும், பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், புதிதாக, 6 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 18.80 கோடியாக அதிகரித்துள்ளது. செல்போன் சேவை துறையில், இந்நிறுவனம், 28.41 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம், 12.80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டு உள்ளது. இதையடுத்து, சென்ற ஏப்ரல் மாத இறுதியில், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 12.28 கோடியாக உயர்ந்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 9.71 கோடியாக இருந்தது.
மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல்., சென்ற ஏப்ரல் மாதத்தில், 1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 47.19 லட்சமாக சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஏர்செல் நிறுவனம், 8,249 புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 6 கோடியாக உயர்ந்துள்ளது.
யூனிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 1.63 லட்சம் அதிகரித்து, 3.18 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு மேலும் தெரிவித்து உள்ளது.
கட்டண உயர்வு:இந்நிலையில், தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், பல நிறுவனங்கள், கடந்த நான்கு மாதங்களில் அலைபேசி சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.இதையடுத்து, வாடிக்கையாளர் ஒருவர், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப அலைபேசியில், பேசுவது, மாதாந்திர அடிப்படையில் சராசரியாக, 359 நிமிடங்களாக குறைந்து போயுள்ளது. இது, கடந்த 2006ம் ஆண்டில், 505 நிமிடங்களாக அதிகரித்து காணப்பட்டது.
இதே போன்று, சி.டீ.எம்.ஏ., அலைபேசி சேவைப் பிரிவின், மாதாந்திர அலைபேசி பயன்பாடும் சராசரியாக, 550 நிமிடங்கள் என்ற அளவிலிருந்து, 230 நிமிடங்களாக குறைந்து போயுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|