பதிவு செய்த நாள்
22 மே2013
00:20
புதுடில்லி:உண்மையான வருவாயை தெரிவித்து, வரி செலுத்தக் கோரி நடப்பு மாதம், 70 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, நேற்று முன்தினம், 35 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வருவாய்: இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:வருமான வரித் துறை சேகரித்த தகவலின்படி, 12.19 லட்சம் பேர், தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இவர்களில், அதிக வருவாய் உள்ளவர்களை, வருமான வரித் துறை அடையாளம் கண்டு, கண்காணித்து வருகிறது.
இது, வரி ஏய்ப்பை தடுப்பதற்கான தொடர் நடவடிக்கையாகும். சென்ற நிதியாண்டில், 1.05 லட்சம் பேருக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதில், அவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார்களா, இல்லையா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டிருந்தது.
மேலும், அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் விவரமும், அதற்கு விளக்கம் அளிக்கும் படிவமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, ஏராளமானோர், தங்கள் வருவாய் குறித்து தெரிவித்து, சுய மதிப்பீட்டு வரியை செலுத்தியுள்ளனர்.இந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும், சுய மதிப்பீட்டு வரி மற்றும் முன்கூட்டிய வரியாக, 600 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது.
இலக்கு:அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் உண்மையான வருவாயை தெரிவித்து, அதற்கான வரியை நடப்பு நிதியாண்டிற்குள் செலுத்துமாறு அரசு, கேட்டுக் கொள்கிறது.நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், மத்திய அரசு, நேரடி வரிகள் மூலம், 6.68 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டில், 5.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|