பதிவு செய்த நாள்
23 மே2013
00:27
கடும் வறட்சியால், வாழை இலை விலை, கிடு கிடுவென, உயர்ந்துள்ளது.விருந்து நிகழ்வுகளில், அதிகம் பயன்படுவது வாழை இலைகள்தான். வாழை இலை வரத்து குறைந்துள்ளதும், அதன் விலை உயர்விற்கு காரணம்.
வறட்சி:இதுகுறித்து,சேலம், வ.உ.சி., சந்தை வியாபாரி, பானுசங்கர் கூறியதாவது: வத்தலக்குண்டு, தூத்துக்குடி பகுதியிலிருந்து தினமும் வாழை இலைகள் சேலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. தினமும், 1,000 வாழை இலை கட்டுகள் வந்தன.கடும் வறட்சியால், 300 வாழை இலை கட்டுகளே, தற்போது சந்தைக்கு வருகின்றன. இதனால், இலைகளின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த, 35 ஆண்டுகளில், வாழை இலை விலை, பத்து மடங்கு உயர்ந்துள்ளது.ஐந்து அடி நீளம் உள்ள, 200 வாழை இலை விலை, 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எட்டு அடி நீளம் உள்ள, 200 வாழை இலை, 5,000 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.கடந்த மாதம், எட்டு அடி நீளம் உள்ள, 200 வாழை இலை, 500 ரூபாய்க்கு விற்பனையானது. இது, மே, 13ம் தேதி, 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சேலம் வ.உ.சி., சந்தையில், 70 வாழை இலை கடைகள் உள்ளன. தூத்துக்குடி, வத்தலக்குண்டு பகுதியில் இருந்து வரும், வாழை இலைகள் அகலமாக உள்ளதால், ஓட்டல்களுக்கு ஒரு இலை, 2 ரூபாய் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.
முகூர்த்த நாள்:சில்லரையில் வாங்குவோருக்கு, ஒரு டிபன் இலை, மூன்று ரூபாய்க்கும், சாப்பாடு இலை, ஏழு ரூபாய்க்கும் விற்கிறோம்.முகூர்த்த நாள், கோவில் விழாக்கள் அதிகரித்துள்ளதால், வாழை இலை விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், வாழை இலைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மழை பெய்தால் மட்டுமே, வாழை இலை விலை கட்டுக்குள் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமதுநிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|