பதிவு செய்த நாள்
23 மே2013
00:30
அடிப்படை கட்டமைப்பு துறையின், மந்தமான வளர்ச்சி காரணமாக, வரும் மாதங்களில், சிமென்ட் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை சிமென்ட், சராசரியாக, 287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேவை:சென்ற ஆண்டு சிமென்டிற்கான தேவை, 50 சதவீதம் வீழ்ச்சி கண்டதை அடுத்து, அதன் விலை சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், சிமென்ட் விலை 5 - 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது.எனினும், நடப்பாண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், சிமென்ட் விலை சற்று உயர்ந்தது. டில்லியில், ஒரு மூட்டை சிமென்ட் விலையில், 5 ரூபாய் உயர்ந்தது.
இது, சண்டிகரில், 21 ரூபாயாகவும், கோல்கட்டாவில், 36 ரூபாயாகவும், மும்பையில், 7 ரூபாய் என்ற அளவிலும் அதிகரித்தது.அதே சமயம், சிமென்டிற்கான தேவை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயராததால், மார்ச், ஏப்ரல் மாதங்களில், அதன் விலை சரியத் துவங்கியது.வட மாநிலங்களில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 5 - 15 ரூபாய் வரை குறைந்தது. மேற்கு மாநிலங்களில், 10 - 30 ரூபாய் சரிவடைந்தது.
பருவ மழை:தென்னிந்தியாவில், சிமென்ட் விலை, 3 - 4 சதவீதம் குறைந்துஉள்ளது என, ஐ.சி.ஆர்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு மார்ச்சில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, சராசரியாக, 300 ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது. இந்நிலையில், பருவ மழை துவங்க உள்ளதாலும், சிமென்ட்டிற்கான தேவை, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதாலும், அதன் விலை மேலும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், மூத்த துணை தலைவர் (சந்தைப்படுத்தல்) பாலாஜி கே. மூர்த்தி கூறும்போது," சிமென்ட் சந்தை வளரவில்லை. தேவை மிக குறைவாகவே உள்ளது. இத்தகைய மந்தநிலை, அடிப்படை கட்டமைப்பு துறையின் செலவினத்தை குறைக்கும். கடந்த சில ஆண்டுகளில், பல சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதும், சிமென்ட் விலை வீழ்ச்சிக்கான காரணமாகும்' என்று தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, தென்னிந்தியாவை சேர்ந்த சில சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனை உயர்த்தி வருகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரை, கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, சிமென்ட் ஆலைகளின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு, 10.60 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 12 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி திறன்"இருந்தபோதிலும், தென்மாநில சிமென்ட் ஆலைகள், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 65 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. இது, வட மாநில சிமென்ட் ஆலைகளில், 76 - 77 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது'என, மூர்த்தி மேலும் கூறினார்.
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 300 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இது, மேற்கு பகுதிகளில், 250 ரூபாயாகவும், வட மாநிலங்களில், 270 - 280 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது."கிழக்கு மாநில சிமென்ட் ஆலைகளிலும், உற்பத்தி குறைவாகவே உள்ளது. அதனால், போட்டியும் அதிகமில்லை. சிமென்டிற்கான தேவை சற்றே உயர்ந்தால் கூட, அதன் விலை அதிகரித்து விடும்' என, சிமென்ட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சஞ்சய் லடிவாலா தெரிவித்தார்.
பருவமழை துவங்க உள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில், சிமென்ட் விலை, மூட்டைக்கு, 15 ரூபாய்க்கும் அதிகமாக உயரும். தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், ஏற்கனவே சிமென்ட் விலை குறைந்துள்ளதால், அதே விலையிலோ அல்லது சற்று குறைவாகவோ அதன் விலை இருக்கும் என, அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல்:நடப்பு நிதியாண்டு, பார்லிமென்ட் தேர்தல் ஆண்டு என்பதால், சிமென்டிற்கான தேவை உயரும், விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என, ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எச்.எம்.பங்குர் கூறினார்.பருவமழை பொய்க்கும் பட்சத்தில், சிமென்ட் விலை, அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|