பதிவு செய்த நாள்
28 மே2013
00:20
சிவகாசி: வரலாறு காணாத வகையில் பேப்பர் விலை உயர்வு, காகித தட்டுப்பாட்டால் பாடநோட்டுகள் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சிவகாசியில் தயாராகும் பாடநோட்டுகள் தரமான பேப்பர், பைண்டிங், ரூலிங்,பேக்கிங்குகள், இயந்திரம் மூலம் தயாரிப்பு பணிகள் நடைபெறுவதால், விரைவில் சேதமடையாமல் ஆண்டு முழுவதும் பயன்படும். சிவகாசி நோட்டுகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. பாட நோட் தயாரிப்பில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேவையான நோட்டுகள் தயாரிக்கின்றனர்.
விலை உயர்வு: ஒவ்வொரு ஆண்டும் பேப்பர், போர்டு 5 சதவீத விலை உயர்வு ஏற்படுவது வழக்கம். பேப்பர் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. நோட்புக் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மேப்லித்தோ, கிரிமோ பேப்பர் கடந்த நவம்பரில் ஒரு டன் 52 ஆயிரம் ரூபாயக்கு விற்பனையானது. தற்போது ஒரு டன் 62 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்ததால் காகித ஆலைகள் உரிய நேரத்தில் சப்ளை வழங்கவில்லை. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, என காரணம் கூறி தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. ஆந்திரா, கர்நாடாக அரசு கொடுக்கும் 5 ஆயிரம் டன், 10 ஆயிரம் டன், என மொத்த ஆர்டர்களுக்கு உடனடியாக சப்ளை கொடுக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள் 50 டன், 100 டன் ஆர்டர் கொடுப்பவர்களுக்கு ஒன்றரை மாதம் வரை தாமதமாக சப்ளை வழங்குகின்றனர். தாமதத்தால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். நோட் தயாரிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் பேப்பர் விலை உயர்வுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளில் ஆர்டர் பெற்று தயாரிப்பை துவக்குகின்றனர். ஏற்கனவே ஆர்டர் பெற்றுள்ளதால், விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோட் தயாரிக்க பயன்படும் "பாலிபோர்டு' அட்டை ஒருடன் கடந்த ஆண்டு 23 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 சதவீத விலை உயர்ந்து 24 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ராப்பர், டூப்ளக்ஸ் போர்டு விலை கடந்த ஆண்டு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து தற்போது 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சீமா நோட்புக் தயாரிப்பாளர் மாரிராஜன் கூறுகையில், ""பேப்பர் விலை டன்னுக்கு 10 ஆயிரம் உயர்ந்துள்ளது. மின்தடை, வேலை ஆட்கள் தட்டுப்பாடு காரணங்களால், இந்த ஆண்டு நோட்டுகள் விலை 20 சதவீத உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.21க்கு விற்ற ஒரு குயர் நோட் தற்பாது ரூ.25 ஆகவும், லாங்சைஸ் ஒரு குயர் நோட்டு ரூ.38ல் இருந்து ரூ. 44 ஆகவும், ரூ.18க்கு விற்ற 80 பக்க நோட் ரூ.22க்கும், ரூ. 9.50 பைசாவிற்கு விற்ற அரைகுயர் நோட்டு ரூ.11.50க்கும் உயர்ந்துள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|