பதிவு செய்த நாள்
29 மே2013
00:59
புதுடில்லி:நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.07 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (1.02 கோடி டன்) விட, 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உலகளவில், தாவர எண்ணெய் பயன்பாட்டில், இந்தியா, முன்னணி நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. அதேசமயம், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம்நாடு, இதனை, மிக அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.
பாமாயில்:நடப்பு பருவத்தில், நவம்பர் மற்றும் ஏப்ரல் தவிர்த்த ஏனைய நான்கு மாதங்களில், தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரித்து உள்ளது. ஆக, ஒட்டு மொத்த அளவில், நடப்பு பருவத்தில், இதன் இறக்குமதி அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், நடப்பு பருவத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.05 கோடி டன்னாகவும், சமையல் அல்லாத இதர பயன்பாட்டிற்கான எண்ணெய் இறக்குமதி, 2 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, தெரியவந்துள்ளது.மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், பாமாயில் இறக்குமதி, 85 லட்சம் டன்னாகவும், சோயா மற்றும் சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி, தலா, 10 லட்சம் டன் என்ற அளவில் இருக்குமென, இச்சங்கத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.கையிருப்பு:நடப்பாண்டு மே மாதம் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் சமையல் எண்ணெய் கையிருப்பு, 18 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 21 லட்சம் டன்னாக இருந்தது.
பொதுவாக, இந்தியாவில், ஜூலை முதல் அக்டோபர் வரையில், பண்டிகை காலம் என்பதால், சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகமாக இருக்கும். அதேசமயம், இக்காலத்தில், உள்நாட்டில், இதன் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.உள்நாட்டில், சமையல் எண்ணெய் பயன்பாடு, ஆண்டுக்கு, 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், உற்பத்தி அந்த அளவிற்கு இல்லாததால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.40 - 1.50 கோடி டன்னாக உயரவும் வாய்ப்புள்ளது என, அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.நடப்பு 2012-13ம் பருவத்தில், இந்தியாவில், சமையல் எண்ணெய்க்கான தேவை, 1.75 கோடி டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உள்நாட்டு உற்பத்தி, 75 லட்சம் டன் என்ற அளவில்தான் இருக்கும். மீதமுள்ள தேவை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டிஇருக்கும்.
நடப்பு பருவத்தில், நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 12 சதவீதம் அதிகரித்து, 51.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சோப், டிடர்ஜெண்ட் உள்ளிட்ட தொழில்துறை பயன்பாட்டிற்கான தாவர எண்ணெய் இறக்குமதி, இதே காலத்தில், 26 சதவீதம் அதிகரித்து, 1.41 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா:நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் பங்களிப்பு, 80 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட இரு நாடுகளில், பாமாயில் உற்பத்தி அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவிலும், இதன் உற்பத்தி, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், சமையல் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என, சமையல் எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.எண்ணெய்
வித்துக்கள்:வரும் ஜூன் மாதம் வரையிலான பயிர் பருவத்தில், நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 3.07 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 2.98 கோடி டன் அதிகம். என்றாலும், கடந்த 2010-11ம் பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 5.5 சதவீதம் குறைவாகும்.ஒட்டு மொத்த அளவில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லாததால், வரும் காலத்திலும், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும், தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|