பதிவு செய்த நாள்
29 மே2013
01:01
அண்மையில், இந்தியாவுக்கு வந்த சீன பிரதமர் லீ கெகியாங், இந்திய புண்ணாக்கு இறக்குமதி மீதான தடையை நீக்க, கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளார்.இதையடுத்து, ஆண்டுக்காண்டு வீழ்ச்சி அடைந்து வரும் நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறி தோன்றியுள்ளது.மூலப்பொருட்கள்:நாட்டின் சோயா உற்பத்தி குறைவு, மூலப்பொருள் விலை உயர்வு, சர்வதேச நாடுகளின் போட்டி போன்ற காரணங்களால், புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்து வருகிறது.
கடந்த 2008-09ம் நிதியாண்டில், இந்தியா, 54 லட்சம் டன் புண்ணாக்கை ஏற்றுமதி செய்தது. இது, 2009-10ம் நிதியாண்டில், 35 சதவீதம் சரிவடைந்து, 34 லட்சம் டன்னாக குறைந்தது.எனினும், புண்ணாக்கு ஏற்றுமதி, 2010-11 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில் முறையே, 51 லட்சம் டன் மற்றும் 56 லட்சம் டன்னாக உயர்ந்தது.இந்நிலையில், இந்திய புண்ணாக்கில், நச்சுத் தன்மை கொண்ட சாயம், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக, சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரியில், இந்திய புண்ணாக்கு இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.இந்தியாவின் மொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருந்த காலம் அது. இந்திய வியாபாரிகளிடம் இருந்து, 600 - 700 கோடி ரூபாய் அளவிற்கு, புண்ணாக்கை, சீனா இறக்குமதி செய்து வந்தது.
தடைக்கு முந்தைய, 2010-11ம் நிதியாண்டில், இந்தியா, சீனாவுக்கு, 5.36 லட்சம் டன் புண்ணாக்கை ஏற்றுமதி செய்திருந்தது.இது, 2011-12ம் நிதியாண்டில், சீனாவின் தடைக்கு பின்பு, 3.54 லட்சம் டன்னாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடைந்தது.இந்நிலையில், அண்மையில் இந்தியா வந்த சீன பிரதமர் லீ கெகியாங் தலைமையிலான குழுவுடன், இந்திய வர்த்தக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில், இந்திய புண்ணாக்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட, சீன குழு விருப்பம் தெரிவித்தது."இதை தொடர்ந்து, இந்திய புண்ணாக்கு இறக்குமதிக்கு, சீனா மீண்டும் அனுமதி அளிக்கும் என, லீ கெகியாங் கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்தார். இது, இந்திய புண்ணாக்கு ஏற்றுமதியாளர்களுக்கு நற்செய்தியாக கருதப்படுகிறது' என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஜய் தத்தா தெரிவித்தார்.இதனிடையே, சீனாவின் தடையால் பாதிக்கப்பட்ட இந்திய வர்த்தகர்கள், ஈரானுக்கு புண்ணாக்கு ஏற்றுமதியை மேற்கொள்ளத் துவங்கினர். அதிலும், அவர்களுக்கு சோதனை காத்திருந்தது.அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, ஈரானுடன் பணப் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல ஏற்றுமதியாளர்கள், ஈரானுக்கான புண்ணாக்கு ஏற்றுமதியை குறைத்துக் கொண்டனர்.சென்ற ஏப்ரலில், ஈரானுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 31 சதவீதம் குறைந்து, 67,500 டன்னாக சரிவடைந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 97,900 டன்னாக இருந்தது.
உறுதிமொழி:"இந்நிலையில், சீன பிரதமர் அளித்த உறுதிமொழி, இந்திய புண்ணாக்கு ஏற்றுமதியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிர்வாக நடைமுறைகளை மேற்கொண்ட பின், ஓரிரு மாதங்களில் சீனாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி மீண்டும் துவங்கும்' என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயல் இயக்குனர் பி.வி.மேத்தா தெரிவித்தார்.இந்நிலையில், விலை உயர்வு காரணமாக, இந்திய புண்ணாக்கு இறக்குமதியை, தென்கொரியா, வியட்னாம், ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் குறைத்துக் கொண்டுள்ளன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|