பதிவு செய்த நாள்
29 மே2013
01:09
மும்பை:பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமைஅன்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருந்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், சந்தை மதிப்பீடுகளை தாண்டி சிறப்பாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனப் பங்கின் விலை, 3.1 சதவீதம் அதிகரித்தது.
மேலும், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதுவாக, நிதிக் கொள்கை குறித்த முடிவுகளை தாராளமாக அறிவிக்க உள்ளன என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், வங்கி மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 130.05 புள்ளிகள் அதிகரித்து, 20,160.82 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,209.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,963.23 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சன்பார்மா, ஸ்டெர்லைட் இந்தியா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 28.10 புள்ளிகள் உயர்ந்து, 6,111.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,127.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,055.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|