பதிவு செய்த நாள்
30 மே2013
01:24
சென்னை: ""தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது,'' என, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேந்தர் மோகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 1,460 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 2.62 கோடி டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நெய்வேலியில், 250 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பரில், முதல் அலகு செயல்பாட்டு வரும். அடுத்த ஆண்டு ஜனவரியில், இரண்டாவது அலகு செயல்படும்.தூத்துக்குடியில், தமிழக அரசுடன் இணைந்து, 500 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும். சீர்காழியில், 4,000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' விதிமுறைப்படி, 10 சதவீத பங்குகள் பொது மக்களிடம் இருக்க வேண்டும். அதன்படியே, 5 சதவீத பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. பங்கு விற்பனை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம், நிலக்கரி மற்றும் பங்கு விற்பனை அமைச்சகங்களுக்கு மட்டுமே உண்டு.நிறுவனத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களின் பணி மூப்பு பட்டியல், இரு மாதங்களில் வெளியிடப்படும். காலி பணியிடங்களுக்கு ஏற்ப, பணியாளர்கள் நிரப்பப்படுவர்.இவ்வாறு சுரேந்தர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|