பதிவு செய்த நாள்
30 மே2013
08:42
மும்பை : நாட்டின் வர்த்தக தலைநகரம், மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும், "பிரீமியர் பத்மினி' டாக்சி கார்கள், வரும் ஜூலை மாதத்துடன் காணாமல் போய்விடும். பழைய அந்த கார்களுக்கான உரிமத்தை, மகாராஷ்டிரா அரசு, இன்னும் இரண்டு மாதங்களில் ரத்து செய்ய உள்ளது. பார்க்க முடியாது : "பியட்' கார் நிறுவனத்தின், பிரீமியர் பத்மினி மாடல் கார்களை, மும்பையைத் தவிர, நாட்டின் வேறு எந்த பகுதியிலும் பெரும்பாலும் பார்க்க முடியாது. 1970, 80ம் ஆண்டுகளில் கொடிகட்டிப் பறந்த அந்தக் கார்கள், பன்னாட்டு கார் நிறுவனங்களின் கார்களால், இப்போது அனேகமாக காணாமல் போய்விட்டன. சென்னையில், ஒரு பிரீமியர் பத்மினி காரைக் கூட காண முடியாது; சாலைகள் எங்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் கார்கள் வழுக்கி ஓடிக் கொண்டிருக்கையில், மும்பையில், காணும் இடமெல்லாம், மஞ்சள் நிற, பிரீமியர் பத்மினி கார்களைக் காண முடியும்.
விற்பனை நிறுத்தம் : அந்த மாநகரில் இயக்கப்படும் வாடகை கார்களில் பெரும்பான்மையானவை, பிரீமியர் பத்மினி கார்கள் தான். அந்த கார்களின் உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில், மும்பையில் மட்டும் அந்தக் கார்கள் இன்னமும், டாக்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகள் ஓடி களைத்து விட்ட அந்தக் கார்களை மாற்றுமாறு, வாடகை கார் ஓட்டுனர்களுக்கு, மும்பை போக்குவரத்துத் துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும், அந்தக் காரை விட்டு பிரிய மனமில்லாமல், ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். உரிமம் ரத்தாகும் : இதையடுத்து, வரும் ஜூலை, 31ம் தேதியுடன், பிரீமியர் பத்மினி கார்களை கைகழுவ வேண்டும்; இல்லையேல், டாக்சி உரிமம் ரத்தாகும் என, இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், மும்பை சாலைகளில், பிரீமியர் பத்மினி கார்களை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரீமியர் பத்மினி காரை, டாக்சியாக ஓட்டி வரும் ஒருவர் கூறும் போது, "இப்போது வரும் கார்களின் பாகங்கள் பெரும்பாலானவை, பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. பிரீமியர் பத்மினி முழுவதும் உலோகத்தால் ஆன, ஸ்ட்ராங்கான வண்டி; செலவும் அதிகம் பிடிக்காது; ஓட்டுவதற்கும் எளிதானது. இந்த அருமையான காரை கைகழுவச்சொல்கின்றனர்; மனம் ஏற்க மறுக்கிறது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|