பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:36
புதுடில்லி:நடப்பு கோடைக் காலத்தில், நாட்டின், "ஏசி' சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அளவிற்கு உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நாடு தழுவிய அளவில், இவ்வாண்டு கடும் கோடையால், பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, "ஏசி' சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி:பல மாநிலங்களில், மின் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையிலும், இவற்றின் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் வரையிலுமாக, "ஏசி' சாதனங்கள் விற்பனை, 10 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இது, இவ்வாண்டு, 12 லட்சமாக அதிகரிக்கும் என, இத்துறை யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உள்நாட்டில், எல்.ஜி., இந்தியா, சாம்சங் இந்தியா, ஹேயர், வேர்ல்பூல் ஆகிய நிறுவனங்களின், "ஏசி' சாதனங்களின் விற்பனை, சிறிய நகரங்கள் வரை அதிகரித்து உள்ளதாக, தெரியவந்துள்ளது.இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத் தின் தலைமை வர்த்தக அதிகாரி, ("ஏசி' சாதனங்கள்) சவ்ரப் பைசாகியா கூறியதாவது:
இவ்வாண்டு, "ஏசி' சாதனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சராசரியாக, இத்துறை ஆண்டுக்கு, 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதேசமயம், ஒரு சில நகரங்களில், இவற்றின் விற்பனை, 50 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு பைசாகியா கூறினார்.சாம்சங் இந்தியா நிறுவனத்தின், மூத்த துணை மேலாளர் மகேஷ் கிருஷ்ணன் கூறுகையில், "நிறுவனத்தின், "ஸ்பிலிட்' வகை "ஏசி' சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக இவ்வாண்டில், "ஸ்பிலிட் ஏசி' சாதனங்களுக்கு, நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது' என்று
தெரிவித்தார்.
குறியீடு:பொதுவாக, குறைந்த மின்சக்தியில், அதிக பயனளிக்கக்கூடிய, "ஸ்டார்' குறியீடு கொண்ட, "ஏசி' சாதனங் களுக்கான தேவை அதிகரித்துள்ளது என, அவர் மேலும் கூறினார்.இதுகுறித்து, ஹேயர் அப்ளையன்சஸ் நிறுவனத்தின், இந்தியா பிரசிடெண்ட் எரிக் பிரகன்ஸா கூறியதாவது:நாடு தழுவிய அளவில், நிறுவனத்தின், "ஏசி' சாதனங்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது.
விற்பனையும், சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. கடந்த, 2012ம் ஆண்டில், 66 ஆயிரம் "ஏசி' சாதனங்கள் விற் பனை செய்யப்பட்டன. இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி முதல், மே மாதம் வரையிலுமாக, 70 ஆயிரம் சாதனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு, பிரகன்ஸா கூறினார்.
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள, அதிக மாறுபாடுகள் போன்றவற்றால், "ஏசி' சாதனங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையிலும், கடந்தா ண்டை விட, நடப்பாண்டில், இச்
சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என, வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (நிறுவன விவகாரங்கள் மற்றும் திட்டமிடல்) சந்தனு தாஸ் குப்தா தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், "ஏசி' சாதனங்களின் விலை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய நகரங்கள்இந்நிலையிலும், கடும் கோடையால், "ஏசி' சாதனங்களின் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் தலைவர் பைசாகியா தெரிவித்தார்.பொதுவாக, நுகர்வோர் மிகவும் தரம் வாய்ந்த மற்றும் குறைந்த மின்சக்தியில் செயல்படும், "ஏசி' சாதனங்களை தேர்வு செய்வதில், மிகவும் கவனமாக உள்ளனர் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில், "ஏசி' சாதனங்கள் விற்பனையில், பெருநகரங்களை விட, சிறிய நகரங்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சிறிய நகரங்கள் தவிர, துணை நகரங்களிலும், இச்சாதனங்களின் விற்பனை மிகவும் அதிகரித்து உள்ளது என, பைசாகியா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|