பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:45
நாட்டின் மிகப் பெரிய சரக்கு போக்குவரத்து மண்டலங்களில் ஒன்றான, ஈரோட்டில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள், ஏற்றிச் செல்ல சரக்கில்லாமல் காத்துக் கிடக்கின்றன.
அனைத்து துறைகளிலும் காணப்படும் மந்த நிலை, உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, அடிப்படை கட்டமைப்பு திட்டங் களில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால், சரக்குகளை கொண்டு செல்வதற்கான ஆர்டர் கிடைக்காமல், லாரி உரிமை யாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலை:ஈரோட்டில், பெரும்பாலான லாரி உரிமையாளர்கள், தலா ஒரு லாரிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். சரக்கு போக்குவரத்திற்கான ஆர்டர் இல்லாததால், இவர்கள் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்."இத்துடன், டீசல் விலை உயர்வும், லாரி உரிமையாளர்களின் வர்த்தகத்தை முடக்கிப் போட்டுள்ளது' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.நல்லதம்பி தெரிவித்தார்.
நாமக்கல்லில் கிட்டத்தட்ட, 45 ஆயிரம் லாரிகள் உள்ளன."இவற்றில், 85 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஒரு லாரிக்கு ஒரு உரிமையாளர் என்ற வீதத்தில் உள்ளவை. இவற்றில், தற்போது, 30-40 சதவீத லாரிகள், வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' என, தென் பிராந்திய மொத்த எரிவாயு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் எஸ்.கார்த்திக் தெரிவித்தார்.முன்பு, மாதம், 23-25 நாட்களுக்கு லாரிகளுக்கு வேலை இருக்கும். இது, தற்போது, 10-15 நாட்கள் என்ற அளவிற்கு குறைந்து விட்டது. குறிப்பாக, பாரத மிகு மின் கழகம் போன்ற பொதுத் துறை நிறுவனங் களின் ஆர்டர் குறைந்ததால், டிரெய்லர் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, அவர் மேலும் கூறினார்.
காற்றாலை திட்டங்கள்:மின் துறை சார்ந்த சாதனங்களை எடுத்துச் செல்லும், 4923 மாடல் டிரெய்லரின் விலை, 34 லட்சம் ரூபாயாக உள்ளது. இதன் உரிமையாளர்களுக்கு, சரக்கு போக்குவரத்து மூலம் மாதம், 3 லட்சம் ரூபாய் கிடைத்து வந்தது."காற்றாலை திட்டங்களுக்கும் இவ்வகை டிரெய்லர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இதில் என்னை போன்ற பலர் முதலீடு செய்தனர். ஆனால், தற்போது நாட்டில் புதிய காற்றாலை திட்டங்கள் எதுவும் வரவில்லை. பீ.எச்.இ.எல்., திட்டங்களும் மந்தமடைந்துள்ளன. இதனால், டிரெய்லர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது' என, டிரெய்லர் உரிமையாளர் எஸ்.பிரபு தெரிவித்தார்.
பொதுவாக, பீ.எச்.இ.எல்., நிறுவனத்தின் பல்வேறு உற்பத்தி பிரிவுகளுக்கு, நாள்தோறும், 200 "கன்டெய்னர்' களில் சரக்கு ஏற்றிச் செல்லப்படும். இது, தற்போது, 20 ஆக குறைந்து விட்டது.காற்றாலைகளை பொறுத்தவரை, 2011ம் ஆண்டு, 7,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 மெகா வாட் உற்பத்திக்கான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப் பட்டன. 2012ம் ஆண்டில், ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 150 மெகா வாட் அளவிற்கே புதிய காற்றாலை மின் திட்டங்கள் உருவாயின. இத்துறையில், சென்ற ஆண்டு, 1,300 கோடி ரூபாய் அளவிற்கே முதலீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.
பராமரிப்பு செலவு:லாரிகளின் பராமரிப்பு செலவினங்களும், உரிமையாளர்களை வெகுவாக பாதித்து உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஜோடி லாரி டயர்களின் விலை, 22 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, தற்போது 34,000-35,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.வாகனக் காப்பீட்டு பிரிமியமும், 20 சதவீதம் அதிகரித்து, 6,260 லிருந்து 10,550 ரூபாயாக உயர்ந்துள்ளது.
லாரிகள் வாயிலான சரக்கு போக்குவரத்து வருவாயில், 83 சதவீதம், சுங்கச் சாவடி, டீசல் வகைக்கும், எஞ்சியது, வாகன கடன் தவணைக்கும், பராமரிப்பு, காப்பீடு மற்றும் வரிகளுக்கும் செலவாகிறது.அடி மேல் அடியாக, சரக்கு குறைந்ததால், லாரி வாடகையும், 15-20 சதவீதம் வீழ்ச்சி கண்டு உள்ளது என, பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|