பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
00:07
புதுடில்லி:வரும் 2017ம் ஆண்டில், இன்டர்நெட்டில் வீடியோ படங்கள், பாடல்கள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றை பார்ப்போர் எண்ணிக்கை, 11.30 கோடியாக உயரும் என, சிஸ்கோ நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.
கிரிக்கெட் போட்டி:இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:குறைந்த செலவில், அதாவது, அலைபேசியில், ஒரு ரூபாய்க்கு கூட வீடியோ படங்களை காணும் வசதி வந்து விட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை, அலைபேசி வாயிலாக, 25 லட்சம் பேர், 26 லட்சம் மணி நேரம் கண்டு ரசித்துள்ளனர்.
அலைபேசியில், வீடியோ படங்களை பார்க்க, இணையதளம் வேகமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். கடந்த 2012ம் ஆண்டு நிலவரப்படி, அலைபேசியில் அகண்ட அலைவரிசையின் சராசரி வேகம், ஒரு நொடிக்கு 1.9 மெகா பைட்டாக இருந்தது.இந்த வேகம், 2017ம் ஆண்டில், மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து, 7 மெகா பைட்டாக அதிகரிக்கும்.
கடந்த 2012ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் அலைபேசி தவிர்த்து, இதர சாதனங்கள் மூலம் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.60 கோடியாக இருந்தது. இது, வரும், 2017ல், 11.30 கோடியாக உயரும்.இதே காலத்தில், உலக அளவில், அலைபேசி தவிர்த்து, இதர சாதனங்கள் மூலம் இணைய தளத்தை பயன்படுத்து வோர் எண்ணிக்கை, 100 கோடியில் இருந்து, 300 கோடியாக உயரும்.
பயன்பாடு:இதே காலத்தில், இந்தியாவில், இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 13.80 கோடியில் இருந்து 34.80 கோடியாக உயரும்.உலகளவில், இந்தியாவில் தான் இணையதள போக்குவரத்து வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. அரசும், தொழில் துறையும், அகண்ட அலைவரிசை வசதி மற்றும் இணைய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், இன்னும் ஏராளமாக செய்ய வேண்டி யுள்ளது.வரும் 2017ல், இந்தியாவில் இணையதள போக்குவரத்து, மாதத்திற்கு, 393 பெடா பைட்டில் இருந்து, 2.5 ஹெக்சா பைட்டாக உயரும்.
தொழில்நுட்பம்:இதே காலத்தில், சர்வதேச அளவில், இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 230 கோடியில் இருந்து, 360 கோடியாக உயரும்.இதே காலத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த இணைய பயன்பாட்டில், "வை பை' தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, 38 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயரும்.50 சதவீதத்திற்கு மேற்பட்ட இணைய பயன்பாடு, கணினி சாராத டேப்லெட், ஸ்மார்ட் போன் மற்றும் தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் வாயிலாக நடைபெறும்.
மதிப்பீட்டு காலத்தில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளும் இணையதள செயல் பாடுகள், மூன்று சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக உயரும்,அது போன்று, தொலைக்காட்சி வாயிலான இணைய பயன்பாடு, 10 சதவீதமாக வளர்ச்சி காணும்.வரும் 2017ம் ஆண்டில், ஒட்டுமொத்த இணையதள போக்குவரத்தில், இயந்திரத்தில் இருந்து இயந்திரம் வாயிலான செயல்பாடு, மூன்று சதவீதமாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்: இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. அதுபோன்று, இணையத்தில், வணிக ரீதியிலான பயன்பாடும் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. கிராமத்து விவசாயிகள், நகர்புற மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இணையம் துணை புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|