பதிவு செய்த நாள்
10 ஜூன்2013
00:44
ஓசூர்:சர்வதேச சந்தையில், சீன மலர்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், மலர் விவசாயிகள், மாற்று விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.நல்ல மண் வளம்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் தாலுகா கடல் மட்டத்தில் இருந்து, 1,500 அடி உயரத்தில் உள்ளது.
இதனால், இப்பகுதியில், ஆண்டின் அனைத்து மாதங்களிலும், மலர் சாகுபடிக்கு தகுந்த சீரான குளிர்ந்த தட்பவெப்ப நிலையும், நல்ல மண் வளமும் காணப்படுகிறது. இதை பயன்படுத்தி, விவசாயிகள் அதிகளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பயிரிடப்படும் பர்ஸ்ட் ரெட், கிராண்ட்கலா உள்ளிட்ட, பல்வேறு வகை ரோஜா மலர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் வரவேற்பை பெற்றுள்ளன. ஓசூர் தாலுகாவில், 5,000 ஏக்கரில், திறந்த வெளி மற்றும் பசுமை குடோன் முறையில், ரோஜா மலர் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுமதி:இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கோவை உள்ளிட்ட, உள்நாட்டு விற்பனைக்கும், ஆண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கடந்த காலத்தில் இலவச மின்சாரம், வங்கி கடன், சீதோஷ்ணநிலை, அரசின் மானிய உதவி வழங்கப்பட்டதால், விவசாயிகள் ரோஜா சாகுபடியில் நல்ல லாபம் அடைந்தனர். இதனால், சாகுபடி பரபரப்பு அதிகரித்தது.மழை பெய்யவில்லை:ஓர் ஆண்டாக, மானிய உதவி மட்டுமின்றி, இலவச மின்சாரம், வங்கி கடன், ரோஜா சாகுபடிக்கு வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனமுடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ரோஜா விவசாயி சிவா கூறியதாவது:ஓசூர் தாலுகாவில், வழக்கத்துக்கு மாறாக, கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கமும், குளிர் காலத்தில் கடும் குளிரும், பனி பொழிவும் காணப்படுகிறது. மேலும், இரண்டு ஆண்டாக, மழை பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் வறண்டது.
உற்பத்தி பாதிப்பு:சூறாவளி காற்றில், பசுமை குடோன்கள் அவ்வப்போது சேதமடைகிறது. இதனால், திறந்த வெளி ரோஜா செடிகள் மட்டுமின்றி, பசுமை குடோன்களில் வளர்க்கப்படும், ரோஜா செடிகளிலும், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டன.இதனால், பூக்கள் உற்பத்தி குறைந்தும், தரமில்லாத பூக்களும் உற்பத்தியாகின்றன. தற்போது, சர்வதேச சந்தையில், ஓசூர் ரோஜாவுக்கு போட்டியாக, சீனாவில் உற்பத்தியாகும், ரோஜா மலர்கள் தரமிக்கதாகவும், மலிவு விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.
20 பூக்கள் கொண்ட, ஒரு கொத்து ஓசூர் மலர்கள், 100 ரூபாய்க்கு விற்பனை வந்தால், சீன பூக்கள், 40, 50 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகின்றன.விலை வீழ்ச்சி:இதனால், வெளிநாட்டு மலர் வியாபாரிகள், ஓசூர் ரோஜாவை புறக்கணித்து, சீன பூக்களை கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, பருவநிலை பாதிப்பால், ரோஜா வர்த்தகம் குறைந்துள்ளது. தற்போது, சீன ரோஜா வருகையால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால், நடப்பாண்டு ரோஜா சாகுபடி பரப்பு, 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|