பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
00:51
மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்றமே மாதம், 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டில் உள்ள, 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பில் இது, புதிய சாதனையாகும்.
முறியடிப்பு:இதன் மூலம், நடப்பாண்டு ஜனவரியில், 8.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிர்வகித்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.மே மாதத்தில், நிதிச்சந்தையிலும், "இன்கம் பண்டு' "லிக்யுட் பண்டு'திட்டங்களிலும் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, "இன்கம் பண்டு' திட்டங்களின் கீழ் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6 சதவீதம் உயர்ந்து, 4.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குறுகிய கால அடிப்படையில், கடன் பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளன.அதிக வட்டி, பணவீக்கம் குறைவதற்கான அறிகுறி போன்றவற்றால், கடன்பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரித்துள்ளது.
பணப்புழக்கம்:இதேபோன்று வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரித்திருந்த காரணத்தால், "லிக்யுட் பண்டு' எனப்படும் நிதிச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் மீதான முதலீடு, 2.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 25 மாதங்களில் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.அதே சமயம்,மே மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 3,400 கோடி ரூபாய்அளவிற்கு, முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில்,300 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற மே மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், பங்கு சார்ந்த பரஸ்பர திட்டங்களின் சொத்து மதிப்பு, 1.8 சதவீதம் (3,400 கோடி ரூபாய்) சரிவடைந்து, 1.75 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில், 11 மாதங்களாக பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப் படுவதால், ஆதாயம் கருதி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.வெளியேறிய முதலீடு
இதேபோன்று, மதிப்பீட்டு மாதத்தில், "கில்ட் பண்டு' திட்டங்களில் இருந்து, 500 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்கு முன், 2009ம் ஆண்டு, ஜூலையில் தான், மிக அதிகமாக, அதாவது 1,061 கோடி ரூபாய் முதலீடு வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற மே நிலவரப்படி, "கில்ட் பண்டு' திட்டங்களின் கீழ், பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 255 கோடி குறைந்து, 8,900 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|