பதிவு செய்த நாள்
21 ஜூன்2013
01:57
புதுடில்லி:கடன் பத்திரங்கள் குறித்த அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, வரலாறு காணாத வகையில், 59.57 ஆக வீழ்ச்சி கண்டது.நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, ரூபாய்மதிப்பு, 60 ரூபாயாக சரிவடைந்தது.
கடன்பத்திரங்கள்:அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் பென் பெர்னகி தலைமையில், நிதிக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து பென் பெர்னகி செய்தியாளர்களிடம் பே”ம்போது, "மாதந் தோறும் 8,500 கோடி டாலர் மதிப்பிலான கடன்பத்திரங்களை வாங்கும் திட்டம், நடப்பாண்டு இறுதியில் இருந்து படிப்படியாக நிறுத்தப்படும்' என, தெரிவித்தார். அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கிஉள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி, இந்த முடிவை எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கையால், வங்கிகளின் வட்டி விகிதம் உயரும் என்பதால், சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை, தற்போது, அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது.
அவர்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்ய ஆயத்தமாகியுள்ளனர். அன்னிய நிதி நிறுவனங்களும், இந்திய பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இதனால் பங்குச் சந்தையும் சரிவை கண்டுள்ளது.
இறக்குமதி நிறுவனங்கள்:இத்தகைய காரணங்களால், டாலருக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, வங்கிகளும், எண்ணெய்இறக்குமதி நிறுவனங்களும் அதிக அளவில் டாலரை வாங்கி வருகின்றன. இதனால், டாலர் புழக்கம் குறைந்து, அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 58.70 ஆக இருந்தது. நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 1.30 ரூபாய்சரிவடைந்து, 60 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.இதற்கு முன், நடப்பு ஜூன் 11ம் தேதி, ரூபாய்மதிப்பு, அதிகபட்சமாக, 58.98 ஆக சரிந்திருந்தது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி டாலர் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து, ரூபாய்மதிப்பின் சரிவு ஓரளவு தடுக்கப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய்மதிப்பு, முந்தைய நாளை விட, 0.87 கா”கள் குறைந்து, 59.57 ஆக சரிவடைந்து காணப்பட்டது.இதனிடையே, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரூபாய்மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் வழிகளுக்கு குறைவில்லை. வீழ்ச்சியை தடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவை தேவைப்படும் போது பயன்படுத்தப்படும்.
நடவடிக்கை:நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, "செபி' ஆகிய மூன்று அமைப்புகளும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ரூபாயின் ஏற்றத் தாழ்வை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். குறிப்பிட்ட காலத்தில், ரூபாயின் மதிப்பு நிலைக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ரூபாய்மதிப்பின் சரிவை தடுப்பது குறித்து, ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும். இதுகுறித்து, ஊக செய்திகளை தெரிவிக்க நான் விரும்பவில்லை' என்றார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|