பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
23:40
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சி காணத் துவங்கியுள்ளது. லண்டன் உலோக சந்தையில், தங்கத்தின் விலை, கடந்த 33 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி நடப்பு ஜூன் மாதம் 20ம் தேதி, அமெரிக்க மத்திய வங்கி, வெளியிட்ட அறிவிப்புதான், இதற்கு காரணம். மாதந்தோறும், 8,500 கோடி டாலர் அளவில் கடன்பத்திரங்களை வாங்குவது, நடப்பாண்டு இறுதி முதல் படிப்படியாக குறைக்கப் பட்டு, வரும் ஆண்டு மத்தியில் நிறுத்தப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதனால், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் செய்த வந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியான அன்று, லண்டன் உலோக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, முந்தைய நாளை விட, 3.5 சதவீதம் குறைந்து, 1,304 டாலராக சரிவடைந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், 1,286 டாலர் வரை வீழ்ச்சி கண்டது.
இதற்கு முன், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில் தான், இதுபோன்ற சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை, 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 20.20 டாலராக குறைந்தது.இதே நாளில், மும்பையில், 10 கிராம் தங்கத்தின் விலை,765 ரூபாய் குறைந்து, 27,160 ரூபாயாக சரிவடைந்தது. ஒரு கிலோ, வெள்ளி விலை, 1,935 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 43,115 ரூபாயாக குறைந்தது.
சென்னையில், தங்கம், கிராமுக்கு, 62 ரூபாய் குறைந்து, 2,564 ரூபாய்க்கும், சவரனுக்கு, 496 ரூபாய் குறைந்து, 20,512 ரூபாய்க்கும் விற்பனைசெய்யப்பட்டது.இந்த வீழ்ச்சி, மறுநாளும் தொடர்ந்தது. ஆக, அந்த இரண்டு நாட்களில் மட்டும், தங்கம் விலை, சவரனுக்கு, 720 ரூபாயும், வெள்ளி விலை, கிலோவிற்கு 2,750 ரூபாயும் குறைந்தது.இருந்த போதிலும், சர்வதேச சந்தைக்கு நிகராக, இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைய வில்லை.
இதற்கு, தங்கம் இறக்குமதி வரி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டதும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதும் தான் காரணம் என, நகை வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.ரூபாய் மதிப்புசர்வதேச விலையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில், தற்போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை, 16 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் ”ங்க வரி உயர்வு காரணமாக, 4,000 ரூபாய் கூடுதலாக உள்ளது என, அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், தங்கத்தின் இறக்குமதி செலவை அதிகரிக்க துணை புரிந்துள்ளது. இதனால் தங்கம் இறக்குமதி செய்வது சற்று குறைந்துள்ளது.எனினும்,ரிசர்வ் வங்கி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்பதால்,இனி வரும் நாட்களில் தங்கத்தின் இறக்குமதி செலவினம் குறைய வாய்ப்புள்ளது.
இது குறித்து எம்கே கமாடிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசோக் மிட்டல் கூறியதாவது:இந்திய நுகர்வோர்கள், தங்கம் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.தற்போது,டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 59-60க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி இதை, 58 ஆக குறைக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம், தங்கம் விலை மேலும் குறையும். இதனால் நுகர்வோர் பயனடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.சர்வதேச முதலீட்டா ளர்கள், தங்கத்திலும், தங்கம் சார்ந்த கடன்பத்திரங்களிலும் செய்து வரும் முதலீடுகளை வேகமாக திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், உலகளவில் தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|