பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:32
புதுடில்லி:கடந்த 2012 - 13ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது, கடந்த முழு நிதியாண்டில், 4.8 சதவீதமாகவும், சென்ற நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 6.7 சதவீதமாகவும் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார சுணக்க நிலை:பொருளாதார சுணக்க நிலையால், எண்ணெய் மற்றும் தங்கம் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதி குறைந்ததைஅடுத்து, கணக்கீட்டு காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிய வந்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1,810கோடி டாலராக (3.6 சதவீதம்) குறைந்துள்ளது.
அதேசமயம், கடந்தாண்டின் இதே காலாண்டில், இந்த பற்றாக்குறை, 2,170கோடி டாலராக இருந்தது. கடந்த முழு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8,780கோடி டாலர் (4.8 சதவீதம்) என்ற அளவில் இருந்தது. இது, முந்தைய 2011 - 12ம் நிதியாண்டில், 7,820கோடி டாலராக (4.2 சதவீதம்) குறைந்திருந்தது.
பெட்ரோலிய பொருட்கள்:கடந்த 2012 - 13ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி, 16,940கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 15,500கோடி டாலராக இருந்தது.நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததைஅடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 19,570கோடி டாலராகக் காணப்பட்டது.
ஏற்றுமதி:கணக்கீட்டு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 1.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி, 0.5 சதவீதம் அதிகரித்திருந்தது.கடந்த நிதியாண்டில், பொறியியல், ஜவுளி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியும், மூலப்பொருளாக பயன்படும் இரும்புத்தாது ஏற்றுமதியும் குறைந்திருந்தது.கணக்கீட்டு நிதியாண்டில், இந்தியாவில்மேற்கொள்ளப்பட்ட நிகர அன்னியநேரடி முதலீடு, 1,980கோடி டாலராகக் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,210கோடி டாலராக உயர்ந்திருந்தது.
அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்களின், கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு சார்ந்த நிகர முதலீடு, 1,660கோடி டாலரில்இருந்து, 2,670கோடி டாலராக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கிமேலும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., - ஜூன்), நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.5 சதவீதமாக இருக்கும் என, கிரிசில் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் டீ.கே.ஜோஷி தெரிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில், நேற்று, சற்று முன்னேற்றம் காணப்பட்டது.நேற்று முன்தினம், வரலாறு காணாத அளவில், ரூபாய் மதிப்பு, 60.73 ஆக வீழ்ச்சி கண்டது. இந்நிலையில்,நேற்று அன்னியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு, முந்தைய நாளை விட, 0.53 கா” அதிகரித்து, 60.20ல் நிலை பெற்றது.சென்ற நிதியாண்டிற்கான நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறித்த தகவலை, ரிசர்வ் வங்கி, ஒரு நாள் முன்னதாக,நேற்றே வெளியிட்டது. அதில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, எதிர்பார்க்கப்பட்ட, 5 சதவீதத்தை விட, 4.8 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவல் காரணமாகவும், நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை விற்பனை செய்ததாலும், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி கட்டுக்குள் வந்ததாக, இத்துறையைச்சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|