பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:36
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதால், வார்ப்பட நிறுவனங்கள், உலோக கழிவு இறக்குமதியை நிறுத்தி வைத்து உள்ளன.அதிக இழப்பு:இதனால், உருக்கு கழிவுகளை மூலப் பொருட்களாக கொண்டு, வார்ப்பட சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், 11 ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு, ஏற்றுமதி வாய்ப்பை தவற விட்டு, பெரும் இழப்பை சந்தித்துள்ளன.சீனா, தைவான் போன்ற போட்டி நாடுகள், இந்த ஏற்றுமதி வாய்ப்பை பங்கு போட்டுக் கொண்டுள்ளதாக, ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நீரல் சிங்கால் கூறியதாவது:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 60ஐ எட்டியு உள்ளது. இந்த விலையில், உருக்கு கழிவுகளை இறக்குமதி செய்தால், செலவு அதிகரிக்கும். மேலும், வாகனம், கட்டுமானம், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கான உருக்கு தேவையும் குறைவாகவே உள்ளது. இந்த சமயத்தில், மூலப் பொருள் விலை உயர்வை, நுகர்வோர் மீது திணிப்பது என்பது, கடினமாக இருக்கும். அதனால் பொறுத்திருந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியா, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 1,300 கோடி டாலர் (7,800 கோடி ரூபாய்) மதிப்பிற்கு உலோக கழிவுகளை இறக்குமதி செய்துள்ளது. இது, 2009-10ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட, 700 கோடி டாலர் மதிப்பிலான இறக்குமதியை விட, இரு மடங்கு அதிகமாகும்.சுரங்க முறைகேடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், கர்நாடகா, கோவா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், இரும்புத் தாது உற்பத்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
இரும்புத்தாது:இதனால், உருக்கு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளாக உள்ள இரும்புத் தாதுவுக்கு உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, உருக்கு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் உருக்கு கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன.இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சியால், இறக்குமதி செய்யப்படும் உருக்கு கழிவுகளுக்கு, வழக்கத்தை விட, கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிலைக்கு வார்ப்பட உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.நடப்பாண்டில், கடந்த ஆறு மாதங்களில், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 10 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப, உருக்கு கழிவு இறக்குமதி செலவினமும் உயர்ந்துள்ளது.
அதே சமயம், சர்வதேச சந்தையில், உருக்கு கழிவு விலை சரிவடைந்துள்ளது. ராட்டர்டாம் சந்தையில், ஒரு டன் உருக்கு கழிவின் விலை, 16 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 335 டாலராக உள்ளது.இந்த விலை சரிவை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில், இந்திய உருக்கு நிறுவனங்கள் உள்ளன. அண்மையில், உலோக கழிவுகள் மீது, 2.5 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், ரூபாயின் வெளிமதிப்பும் சரிவுஅடைந்துள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டின் வார்ப்பட துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய உலோக மறுசுழற்சியாளர்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் செயின் நதானி கூறியதாவது:இந்திய உருக்கு மற்றும் இரண்டாம் தர உலோக பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு இது மிகவும் சோதனை காலம். 2009ம் ஆண்டு ஏற்பட்ட, சர்வதேச பொருளாதார சரிவில் கூட, இது போன்ற நிலையை சந்தித்ததில்லை.
இறக்குமதி வரி:உலோக கழிவு இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளதால், உருக்கு நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை குறைத்துள்ளன. உலோக கழிவுகளுக்கான இறக்குமதி வரியை நீக்கினால் மட்டுமே, இத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்திய நிறுவனங்கள், உருக்கு மட்டுமின்றி, அலுமினியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவற்றின் கழிவுகளையும் இறக்குமதி செய்து வருகின்றன. இந்த உலோக கழிவுகள் மூலம், பெரும்பாலான நிறுவனங்கள், அழகிய கலைபடைப்புகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கின்றன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|