பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:15
புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டின், முதல் ஆறு மாத (ஜன.,-ஜூன்) காலத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 1,91,055 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1,99,969 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், காபி ஏற்றுமதி, 4.45 சதவீதம் சரிவடைந்துள்ளது என, காபி வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் காபி உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், இதன் விலை குறைந்து காணப் படுகிறது. இதன் காரணமாகவே, நாட்டின் காபி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என, காபி வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதிப்பீட்டு காலத்தில், மதிப்பின் அடிப்படையில், நாட்டின் காபி ஏற்றுமதி, 2,818 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 2,955 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.நாட்டின் மொத்த காபி ஏற்றுமதியில், ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி, 7 சதவீதம் குறைந்து, 1,10,983 டன்னிலிருந்து, 1,03,296 டன்னாக சரிவடைந்து உள்ளது.
இதே போன்று, அராபிகா வகை காபி ஏற்றுமதியும், 4 சதவீதம் சரிவடைந்து, 41,026 டன்னிலிருந்து, 39,367 டன்னாக குறைந்துள்ளது.மேலும், "இன்ஸ்டன்ட்' காபி ஏற்றுமதியும், 32 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 17,826 டன்னிலிருந்து, 12,153 டன்னாக சரிவடைந்துள்ளது. இந்தியாவிலிருந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளுக்கு அதிகளவில் காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் காபி உற்பத்தி, 3,15,500 டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011-12ம் பருவத்தில் மேற் கொள்ளப்பட்ட உற்பத்தியை (3,14,000 டன்) விட, 1,500 டன் அதிகமாகும் என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|