பதிவு செய்த நாள்
09 ஜூலை2013
00:26
மும்பை:நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், காலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவில், 99 காசு சரிவடைந்து, 61.21 ஆக வீழ்ச்சி கண்டது.இந்த நிலையில், ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால், பிற்பகலில், ரூபாய் மதிப்பின் சரிவு கட்டுக்குள் வந்தது.வேலைவாய்ப்பு :நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 0.37 காசு சரிவடைந்து, 60.62 ஆக காணப்பட்டது.
கடந்த வாரத்தில், வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளிஅன்று, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியானது.இதன் தாக்கம், நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நிதிச் சந்தைகளில் எதிரொலித்தது. டாலர் மதிப்பு உயர்ந்து, அதற்கு நிகரான ரூபாய் உட்பட, பெரும்பாலான சர்வதேச கரன்சி களின் மதிப்பு சரிவடைந்தது.இந்தியாவை பொறுத்தவரை, இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து உள்ளது.
செலவினம் அதிகரிப்பு:இந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவினமும் உயர்ந்துள்ளது.இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் உள்ளிட்ட, அனைத்து இறக்குமதி நிறுவனங்களுக்கும் டாலருக்கான தேவை அதிகரித்து உள்ளது.இதனால், இறக்குமதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை, அதிக அளவில் டாலரை வாங்கத் துவங்கியுள்ளன.இது, நிதிச் சந்தையில், டாலர் புழக்கத்தை குறைத்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி :நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், ஒரு கட்டத்தில், ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டதை அடுத்து, அதிக அளவில் டாலரை விற்பனை செய்யுமாறு, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாகவே, ரூபாய் மதிப்பு, மிகப் பெரிய வீழ்ச்சியில் இருந்து, சற்று முன்னேற்றம் கண்டதாக, நிதி ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.ரூபாய் மதிப்பு, கடந்த ஜூன் 26ம் தேதி அன்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 60.76 ஆக குறைந்தது.இதை விஞ்சி, நேற்று, ரூபாய் மதிப்பு, ஒரு கட்டத்தில், 61.21ஐ எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|