பதிவு செய்த நாள்
09 ஜூலை2013
00:34
மும்பை:சென்ற மே மாதம், வீட்டு வசதி மற்றும் நுகர்வோர் சாதனங்களுக்கு, வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன.நடப்பு 2013-14ம் நிதியாண்டின், சென்ற மே மாதத்தில், வங்கிகளின் சில்லரை கடன் வளர்ச்சி, 16.3 சதவீதம் அதிகரித்து, 9,27,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 7,97,400 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது.எளிய நடைமுறைகள்:மதிப்பீட்டு மாதத்தில், ஒட்டுமொத்த வங்கிகளின் உணவு சாரா கடன், 14.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49,44,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், சில்லரை கடன்களின் பங்களிப்பு, 95 சதவீதமாக உள்ளது.
சில்லரை கடன் பிரிவின் வளர்ச்சியில், வீட்டு வசதி கடன் பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.சென்ற மே மாதம், வங்கிகளின் வீட்டு வசதிக் கடன் வளர்ச்சி, 17.1 சதவீதம், அதாவது, 70 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, 4,79,900 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே மாதத்தில், 4,09,900 கோடி ரூபாயாக இருந்தது.
சிறிய நகரங்கள் மற்றும் வளர்ச்சி பெற்று வரும் புறநகரங் களில் வீட்டு வசதிக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகின்றன.இத்துடன், இவ்வகை கடன்களை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும், கடன் விண்ணப்பங்கள், உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, விரைந்து முடிவெடுக்கப்படுகின்றன.கோடை காலம்:வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காமல், வீட்டு வசதிக் கடன் உடனடியாக வழங்கப்படுவதால், இப்பிரிவில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, சிறப்பாக உள்ளது என, வங்கியாளர் ஒருவர் தெரிவித்தார்.
வீட்டு வசதி துறையை அடுத்து, நுகர்வோர் சாதனங்களுக்கான வங்கிகளின் கடன் வளர்ச்சி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.கோடைக் காலம் என்பதால், சென்ற மே மாதத்தில், ஏர்கண்டிஷனர், ரெப்ரிஜரேட்டர், மின்விசிறி போன்ற குளுமை தரும் சாதனங்களின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.இதையடுத்து, மதிப்பீட்டு மாதத்தில், வங்கிகளின் நுகர்வோர் சாதனங்களுக்கான கடன், 22 சதவீதம் அதிகரித்து, 8,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலையால், வாகனத் துறையின் வளர்ச்சி, சுணக்கமாகவே உள்ளது.இந்த நிலையிலும், சென்ற மே மாதம், வங்கிகளிடம் இருந்து வாகனங்கள் வாங்குவதற்காக, அதிக அளவில் கடன் பெறப்பட்டுள்ளது.தொழில் துறை:இதையடுத்து, மதிப்பீட்டு மாதத்தில், வங்கிகள் வழங்கிய வாகனக் கடன், கடந்த ஆண்டின் மே மாதத்தில் வழங்கப்பட்ட கடனை விட, 25,300 கோடி ரூபாய் அதிகரித்து, 91,400 கோடியில் இருந்து, 1,16,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், ஒட்டுமொத்த தொழில் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி, 19.4 சதவீதத்தில் இருந்து, 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.
நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடன் வழங்குவதில், மிகுந்த எச்சரிக்கையாக உள்ளன. இத்தகைய நிறுவனங்கள், வங்கிகளின் வசூலாகாத கடன்களில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது தான் இதற்கு காரணம்.கல்வி கடன்:அதனால், மதிப்பீட்டு மாதத்தில், நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிகளின் கடன், 7.8 சதவீதம் என்ற அளவில், குறைவான வளர்ச்சியை கண்டுள்ளது.இதே காலத்தில், வங்கிகளின் கல்விக் கடன், 10.2 சதவீதமும், தனிநபர் கடன் 11 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன."வங்கிகள் எதிர்பார்த்த அளவிற்கு, நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி இல்லை. அதனால் சில்லரை கடன்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் வேளாண் கடன்களுக்கு, வங்கிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன' என, அந்த வங்கியாளர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|