பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:41
ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் துறையினருக்கும், கலால் வரி மற்றும் சுங்க வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், பிரச்னைகளை தீர்க்க, பிரத்யேக ஏற்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கலால் வரி:சுங்க வரி மற்றும் கலால் வரி இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு பின், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நிருபர்களிடம் கூறியதாவது:சுங்கவரி மற்றும் கலால் வரி வசூலிப்பதில், மிகுந்த முனைப்புடன் செயலாற்றும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுங்க வரி, சேவை மற்றும் கலால் வரி வாயிலாக, நடப்பு நிதியாண்டில், 5.65 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது, கடந்த ஆண்டின் இலக்கை விட, 19 சதவீதம் அதிகம். இருப்பினும், திட்டமிட்டபடி அரசு தன் இலக்கை எட்ட முடியும் என்ற, நம்பிக்கை உள்ளது. கடந்த நிதி ஆண்டில், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 6 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சுங்க வரி மற்றும் கலால் வரி வசூலிப்பில், திட்டமிட்ட இலக்கை எட்ட முடியும்.
நாட்டிலுள்ள, முக்கிய துறைமுகங்களில், 24 மணி நேரமும் சுங்க வரிச்சோதனை நடத்தும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தொழில் துறையில், 1.20 லட்சம் பேர், கலால் வரி செலுத்துகின்றனர். சேவை வரி செலுத்தாதவர்களுக்கு, சில வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன.அதன் படி, அவர்கள், வரும், 2013ம் ஆண்டுக்குள், சேவை வரியை செலுத்தியாக வேண்டும். அவ்வாறு செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.எனவே, கால தாமதம் செய்யாமல், உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேவை வரி செலுத்துவது நல்லது. எக்காரணம் கொண்டும், இந்த வாய்ப்பு, நீட்டிக்கப்பட மாட்டாது.
சேவை வரி:பட்ஜெட் தயாரிப்புக்கு முன், தொழில் துறையினர் சந்திப்பு நடைபெறும். அப்போது, கலால் வரி மற்றும் சேவை வரி தொடர்பாக, தொழில் துறையினருக்கு, நிறைய சிரமங்களும் சந்தேகங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, அதற்கென ஒரு புதிய செயல்திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் துறையினரும், தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, புது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரச்னை:இதன் மூலம், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை மதியம், மத்திய நிதித் துறையின் உயர் அதிகாரி, பார்த்தசாரதி ஷோம், தொழில்துறையினரை சந்திப்பார். அவரிடம், தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு கொள்ளலாம். தனி நபர் பிரச்னைகளுக்கு, இந்த ஏற்பாடு பொருந்தாது.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|