பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
00:51
புதுடில்லி:வரும் 2025ம் ஆண்டில், இந்திய ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, தற்போதைய நிலையிலிருந்து, நான்கு மடங்கு அதிகரித்து, 20 ஆயிரம் கோடி டாலராக, வளர்ச்சி காணும் என, வசீர் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.உலகளவில், சீனா மற்றும் இந்தியாவின் ஆடைகள் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட, இவ்விரு நாடுகளின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது என, ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவின் ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, 4,500 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவில் ஆடைகளுக்கான தேவை நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள், இத்துறையில், இரட்டை இலக்க அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றன. உலகளவில், ஆடைகள் சந்தை மதிப்பில், இவ்விரு நாடுகளின் பங்களிப்பு, 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஆடைகள் ஏற்றுமதி அதிகரித்து வரும் அதே நிலையில், உள்நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, ஆடைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது என, வசீர் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.தற்போது, சர்வதேச அளவில், ஆடைகளுக்கான சந்தை மதிப்பு, 1.10 லட்சம் கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2025ம்ஆண்டில், 2.10 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். தற்போதைய நிலையில், சீனாவின் ஆடைகள் ஏற்றுமதி சற்று குறைந்து உள்ளது.
இது, இந்திய ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை நன்கு உள்ளதால், இந்திய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும், இத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நீண்ட கால அடிப்படையில், இத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு நல்ல அளவில் ஆதாயம் கிடைக்கும் என, அகர்வால் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|