பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:50
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,நாட்டின் மறைமுக வரி வசூல், 4.7 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தொழில் துறையில் சுணக்க நிலை மற்றும் உற்பத்தி வரி வசூல் குறைவு போன்ற காரணங்களால், மறைமுக வரி வசூல் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், மறைமுக வரி வசூல், 1.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நாட்டின் மறைமுக வரி வசூல், 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த, 19 சதவீதத்தை காட்டிலும், மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.மறைமுக வரியின் கீழ்,உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 0.1 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இதையடுத்து, கணக்கீட்டு காலாண்டில், உற்பத்தி வரி வசூல், 4.9 சதவீதம் சரிவடைந்து, 37,600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், சுங்க வரி வசூல், 6.9 சதவீதம் அதிகரித்து, 40,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், சேவை வரி வசூலும், 15.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|