பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
01:53
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. சுங்க வரி உயர்வால், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருகின்றனர். கடந்த, 18 மாதங்களில், தங்கம் மீதான இறக்குமதி வரி, ஒரு சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதே சமயம், இதே காலத்தில், வெளிநாடுகளில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, கடத்தல்பேர்வழிகள், இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு:தங்கம் கடத்தலை தடுக்க, விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் பலத்த கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாக, கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், 59.82கோடி ரூபாய்மதிப்புள்ள தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை (12.86கோடி ரூபாய்) விட, 365 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 99.34கோடி ரூபாய்மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, இரு மடங்கு அதிகம் என, வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சென்ற நிதியாண்டை விட, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் மதிப்பு, 150 சதவீதம் உயர்ந்து, 250கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்கவரி:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த முழு நிதியாண்டில் பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தில், கிட்டத்தட்ட, 60 சதவீதத்தை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே எட்டி விட்டோம். இதன் அடிப்படையில் கணக்கிட்டால், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது, இரண்டரை மடங்கு அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளாலும், சட்ட விரோதமாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. "கள்ளத்தனமாக தங்கம் கொண்டு வருவது குறித்து, எங்களுக்கு பல வகைகளில் தகவல்கள் கிடைக்கின்றன. அதன்பேரிலேயே கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் வரை,போதைப் பொருள் கடத்தல் தான், அதிக மதிப்புள்ள கடத்தலாக கருதப்பட்டது. தற்போது, அந்த இடத்தை தங்கம் பிடித்துள்ளது' என, அந்த அதிகாரிமேலும் கூறினார்.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், வரி உயர்வால், தங்கம் கடத்துவது அதிகரித்து உள்ளதை குறித்து, மத்திய நிதி அமைச்சகம் ஆய்வுமேற்கொண்டு வருகிறது. கடத்தலை தடுக்க, அதிக அதிகாரம்வேண்டும் என, சுங்க அதிகாரிகள்கோரிக்கை விடுத்து உள்ளனர். கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம்மேற்கொண்டால், கடத்தல் குறைய வாய்ப்புள்ளது.கட்டுப்பாடுகள்:சென்றமே மாதம், 162 டன் தங்கம் இறக்குமதியானது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜூன் மாதம், தங்கம் இறக்குமதி, 31 டன்னாக குறைந்துள்ளது. இதற்கு, சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதும் காரணமாக இருக்கலாம். உத்தேச மதிப்பீட்டின்படி, கடத்தல் தங்கத்தில், 5 - 10 சதவீதம் மட்டுமே, சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. எஞ்சியவை, அவர்கள் பார்வையில் இருந்து தப்பித்து, உள்நாட்டில் ஐக்கியமாகி விடுகின்றன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|