பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
01:58
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் 26ம் தேதி வரையிலுமாக, இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் இருந்து, 18,500 கோடி ரூபாயை (300 கோடி டாலர்) திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன.
பங்குச்சந்தை:டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவது மற்றும் அமெரிக்காவின் புதிய நிதி கொள்கை போன்றவற்றால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டுள்ள முதலீட்டில் இருந்து, அதிக அளவு தொகையை திரும்பப் பெற்றுள்ளதாக "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கண்ட மொத்த தொகையில், 12,081 கோடி ரூபாயை கடன்பத்திரங்களில் இருந்தும், 6,394 கோடி ரூபாயை நிறுவனப் பங்குகளில் இருந்தும் விலக்கிக் கொண்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டில் இருந்து, 44,162 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து, இதுவரையிலுமாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 13 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாயின் மதிப்பு, 59.04 ஆக இருந்தது.ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதக் காலத்தில் (ஜன., -மே) கடன்பத்திர முதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்ததால், இந்நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
பங்கு முதலீடு:நடப்பு ஆண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் கடன் பத்திர முதலீட்டில் இருந்து, நிகர அளவில், 21,169 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டுள்ளன.அதே சமயம், இதே காலத்தில் இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு நிகர அளவில் 65,785 கோடியாக உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்போதைய, நிலவரப்படி இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,756 ஆக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|