பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
01:28
நடப்பு கரீப் பருவத்தில், சணல் பைகளுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதால், சணல் துறை, 1,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் சணல் பயிர் உற்பத்தியில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள சணல் தொழிற்சாலைகளில், 75 சதவீதம் மேற்கு வங்கத்தில் தான் உள்ளன.
உணவு தானியங்கள்:மத்திய அரசு, பொது வினியோக திட்டத்திற்கான உணவு தானியங்களின் வினியோகத்திற்கு, சணல் பைகளை பயன்படுத்துமாறு, தேசிய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இக்கழகமும், இதர மாநில முகமை அமைப்புகளும், உணவு தானியங்களை சணல் பைகளில் அடைத்து, நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வருகின்றன.இதற்காக, கரீப் மற்றும் ரபி பருவங்களில் சணல் பைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.சணல் துறை, ஆண்டுக்கு, 15 லட்சம் டன் சணல் பைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு உள்ளது.
இதில், கிட்டத்தட்ட, 35 -40 சதவீதம், அதாவது, 8 லட்சம் டன் சணல் பைகளை, தேசிய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது.இந்த சணல் பைகள், பஞ்சாப், அரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களின் உணவு தானியக் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன், இதர மாநில முகமை அமைப்புகளும், சணல் பைகளை கொள்முதல் செய்கின்றன.இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் சணல் பைகள், தரமற்றவையாகவும்,அதே சமயம், அதிக விலை கொண்டதாகவும் உள்ளதாக, முகமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், சணல் ஆலைகள், சணல் பைகளை சரிவர சப்ளை செய்யாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், முகமை அமைப்புகள், சணல் பைகளை கொள்முதல் செய்வது குறைந்து வருகிறது.அதே சமயம், முகமை அமைப்புகள், உறுதி அளித்தபடி, சணல் பைகளை கொள்முதல் செய்யத் தவறுவதால், அதற்கான தேவையை, அரசு குறைத்து மதிப்பீடு செய்வதாக, சணல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேவை:நடப்பு கரீப் பருவத்தில், சணல் பைகளுக்கான தேவை, 1.60 லட்சம் டன் என்ற அளவிற்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டு, சணல் பொதிகள் (ஒரு பொதி-180 கிலோ) உற்பத்தி, 95 லட்சம் முதல் 1 கோடி வரை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இத்துறையில், ஏற்கனவே, 27 லட்சம் பொதிகள் இருப்பு உள்ளன. "இந்நிலையில், சணல் பைகளுக்கான தேவை குறைந்துஇருப்பது, சணல் துறையை பெரிதும் பாதிக்கும்' என, இந்திய சணல் ஆலைகள் கூட்டமைப்பின் (இஜ்மா) முன்னாள் தலைவர் சஞ்சய் கஜாரியா தெரிவித்தார்.
சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால், சணல் விலை, 13.6 சதவீதம் குறைந்து, ஒரு டன், 52 ஆயிரம் ரூபாயில் இருந்து, 45 ஆயிரம் ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.சணல் பைகளை கொள்முதல் செய்வதற்கான கொள்கை எதையும், மேற்கு வங்க அரசு உருவாக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள, சணல் பை தயாரிப்போர் மீது, மத்திய, மாநில அரசுகள் கருணை காட்டாமல் உள்ளன என, அவர் மேலும் கூறினார்.
வேலை இழப்பு:சணல் பைகளுக்கான தேவை குறைந்துள்ளதால், உற்பத்தி குறைந்து, பலர் வேலை இழந்து உள்ளனர். இதே நிலை நீடித்தால், இத்துறை, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்திக்க நேரும். இந்திய சணல் ஆலைகளில், 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறையும் கொள்முதல்:1987ம் ஆண்டு, சணல் சிப்பமிட்ட பொருட்கள் சட்டத்தின் படி, மாநில முகமை அமைப்புகள், சர்க்கரை மற்றும் உணவு தானியங்களை, சணல் பைகளில் அடைத்து தான் விற்க வேண்டும்.எனினும், 2011ம் ஆண்டு சணல் மற்றும் நாரிழை கொள்கைப்படி, வரும் 14வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், சணல் பைகளின் கட்டாய பயன்பாடு, நீக்கப்பட வேண்டும்.இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு, பிளாஸ்டிக் பைகளை ஊக்குவிக்கும் வகையில், உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரைக்கான சணல் பைகளை கொள்முதல் செய்வது, முறையே, 10 சதவீதம் மற்றும் 60 சதவீதம் குறைக்கப்பட்டது. இது, நடப்பாண்டு, முறையே, 10 சதவீதம் மற்றும் 80 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|