பதிவு செய்த நாள்
03 ஆக2013
00:22
புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013 - 14ம் ஆண்டிற்கான சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஆக., - செப்.,) 3.45 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே சமயம், நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப்:ஆனால், இதுவரை மத்திய அரசின் முகமை அமைப்புகள், 3.35 கோடி டன் அளவிற்கே நெல் கொள்முதல் செய்துள்ளன. செப்டம்பர் வரையிலுமாக ஒட்டு மொத்த அளவில் 3.45 கோடி டன் அளவிற்கே நெல் கொள்முதல் இருக்கும் என, மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் நெல் உற்பத்தியில் பஞ்சாப், அரியானா, ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு, மிகவும் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் நெல் கொள்முதலில் இதுவரையிலுமாக அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களின் பங்களிப்பு முறையே, 26 லட்சம் டன் மற்றும் 85 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டு, இவ்விரு மாநிலங்களில் இருந்தும் முறையே,19 லட்சம் டன் மற்றும் 76 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.நடப்பு ஆண்டில் இது வரையிலுமாக ஆந்திராவில் இருந்து 63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கர் (48 லட்சம் டன்) மற்றும் ஒடிசா (35 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்கின்றன. பின் அது அரிசியாக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இருப்பு வைப்பதுடன், பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
சென்ற மாத இறுதி நிலவரப்படி, இந்திய உணவு கழகம் உள்ளிட்ட அரசின் முகமை அமைப்புகள் வசம் 3.15 கோடி டன் நெல் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் இருப்பு வைக்க வேண்டிய அளவை விட, மூன்று மடங்கு அதிகம்.
கொள்முதல் விலை:மத்திய அரசு, நடப்பு சந்தைபடுத்தும் பருவத்தில், ஒரு குவிண்டால் நெல்லை (சாதாரண வகை) 1,310 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்து வருகிறது. இது, கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட விலையை விட, குவிண்டாலுக்கு 60 ரூபாய் அதிகம் என, அரசின் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|