பதிவு செய்த நாள்
07 ஆக2013
00:53
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதில்இருந்து, வர்த்தகம் முடியும் வரை, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், மிகவும் சரிவடைந்து போயின.
குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 2.34 சதவீதம் அல்லது 449.22 புள்ளி கள் வீழ்ச்சி கண்டு, 19 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் அதாவது, 18,733.04 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத் தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 19,131.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,667.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
சர்வதேச நிலவரம்:சர்வதேச நிலவரங்கள் நன்கு இல்லாததாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு கடுமையாக சரிவடைந்ததாலும், கடந்த நான்கு மாதங்களுக்கு பின், பங்கு வர்த்தகம் மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க அரசு, கடன் பத்திரங்கள் வாங்குவதை குறைத்து கொள்ளும் என்ற ஊகச் செய்தியால், சர்வதேச அளவில், பல நாடுகளின் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிஉள்ளதை அடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட, வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில், முதலீட்டை குறைத்து கொண்டதுடன், அதிகளவிலான தொகையையும் திரும்பப் பெற்று வருகின்றன. இதுவும், இந்திய பங்கு வர்த்தகக்தின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
செயல்பாடு:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பல இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கும் குறைவாக உள்ளதால், பல சில்லரை முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை குறைத்து கொண்டுள்ளனர். நேற்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையில், நேற்று, 2,200 நிறுவனப் பங்குகள் மீது வர்த்தகம் நடைபெற்றது. இதில், 1,527 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 539 நிறுவனப் பங்குகளின் விலை சற்று உயர்ந்தும், மீதமுள்ள நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர் (14.34 சதவீதம்),பெல்(6.95 சதவீதம்), ஸ்டெர்லைட் (5.31 சதவீதம்) உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து காணப்பட்டன. அதே சமயம், டாட்டா மோட்டார்ஸ், விப்ரோ, டி.சி.எஸ்., ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை சிறிது உயர்ந்தும், என்.டி. பி.சி., நிறுவனப் பங்கின் விலை, மாற்றமின்றியும் இருந்தது.
தேசிய பங்கு சந்தை:தேசிய பங்குச் சந்தையிலும், வர்த்தகம் மிகவும் மந்தமாகவே இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 143.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 5,542.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இதன் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,664.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,521.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
ரூபாய் மதிப்பில் கடும் சரிவு நிலை:நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 61.80 ஆக மிகவும் சரிவடைந்தது.இதற்கு முன், சென்ற ஜூலை, 8ம் தேதி, ரூபாய் மதிப்பு, 61.21 வரை சரிந்து, பின் மீண்டது. இதையும் தாண்டி, நேற்று ரூபாய் மதிப்பு, புதிய வீழ்ச்சியை கண்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை விற்பனை செய்யுமாறு வங்கிகளை அறிவுறுத்தியது. இதன் காரணமாக, ரூபாய் மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டது. நேற்று, வர்த்தகம் முடியும்போது, ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.07 காசுகள் உயர்ந்து, 60.81ல் நிலை பெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|