பதிவு செய்த நாள்
16 ஆக2013
23:11
கார் வாங்குவது இப்போதெல்லாம் ஜூஜூபி மேட்டர் ஆகி விட்டது. அந்த காரை பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. காரை வாஷ் செய்வதற்கென ஒர்க்ஷாப்புகள் இருந்தாலும், நம் காரை நாமே கழுவும்போது சிறு கீறல்கள் விழுவதை தவிர்க்கலாம். சிக்கனமாக நாமே காரை கழுவி சுத்தம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு சோப், இரு பக்கெட், கந்தல் துணி இருந்தால் போதும். பணியை துவங்கி விட்டால், உங்கள் பிள்ளைகளும் உற்சாகமாக உதவுவார்கள். சரி...இனி துவங்குவோமா?
முதலில் உங்கள் காரை சூரிய வெளிச்சம் நேரடியாக படாத இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். முதல் முறை கழுவியவுடன் திட்டு திட்டாக காய்வதை இது தடுக்கும். சுத்தம் செய்ய தேவையான பொருட்களை முதலிலேயே அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீரில் கார் வாஷ் சோப்பை தேவையான அளவு கலக்கவும். மற்றொரு பக்கெட்டில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளவும்.ஹோஸ் பைப்பை ஸ்மூத் ஆக காரின் மீது பாய்ச்சவும். தண்ணீரை வேகமாக பீச்சியடித்தால் காரின் மீது கீறல் விழும். ஜன்னல்களில் தண்ணீரை மேல் நோக்கி பாய்ச்சவும். துணி அல்லது ஸ்பாஞ்சை சோப்பு தண்ணீரில் முக்கி காரை கழுவ ஆரம்பிக்கவும். அழுக்கு ஸ்பாஞ்சை அடிக்கடி சுத்தமான தண்ணீர் அடங்கிய பக்கெட் தண்ணீரால் சுத்தம் செய்யவும். காரின் ஒரு பகுதியை கழுவி முடித்து விட்டால், ஹோஸ் தண்ணீரை பீய்ச்சியடித்து அந்த பகுதியை கழுவி விட வேண்டும். தவறினால் சோப் காய்ந்து கறையாக மாறி விடும். ஈரத்தை காற்று காய வைக்கும் முன் டவலால் ஈரத்தை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும்.
காரின் கீழ் பாகத்தில்தான் சகதியும், அழுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த பாகங்களைதான் கடைசியாக சுத்தம் செய்ய வேண்டும். கீழ் பகுதியை சுத்தம் செய்வதற்கென தனியாக வேறு ஸ்பாஞ்ச் வைத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. கார் சக்கரத்தை சுத்தம் செய்ய, நீளமான பிரஷை பயன்படுத்தவும். கார் டயர் ஓரங்களை மட்டும் பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். டயரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஹோஸ் பைப்பால் தண்ணீரை பீய்ச்சியடிக்கவும். கார் முழுவதையும் சுத்தம் செய்து முடித்த பின் சுத்தமான காய்ந்த டவலால் ஈரத்தை துடைத்தெடுக்கவும். இப்போது பார்த்தால்...இது நம் கார்தானா என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!
சுத்தமான பராமரிப்புக்கு "டிப்ஸ்'
* காரை கழுவும் முன் அனைத்து ஜன்னல்களையும் இறுக மூட மறக்க வேண்டாம். சிறு இடைவெளி வழியாக தண்ணீர் உள்ளே சென்றால் சீட்டில் நாசமாகி விடும்.
* பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப்பை, கார் கழுவ பயன்படுத்தக் கூடாது. கார் பெயின்டின் மீதுள்ள மெழுகை இது உரித்து எடுத்து விடும்.
* நீண்ட நாட்கள் பயன்படுத்தாதபோது, பறவை எச்சம் படாதவாறு எப்போதும் காரை மூடி வைத்திருப்பது நல்லது. * சூடான தண்ணீரில் முக்கிய பழைய துணியால் இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால், காரின் பெயின்டை பதம் பார்த்து விடும்.
* இந்த துணி மற்றும் ஸ்பாஞ்ச் ஆகியவற்றை வாஷிங் மெஷினில் போட்டுதான் சுத்தம் செய்ய
வேண்டும்.
* காரின் மீது அதிக சகதி அல்லது அழுக்கு இருந்தால் பலமுறை சோப் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரங்கள்தான் சுத்தம் செய்ய உகந்த நேரங்கள்.
* காரின் உட்புற கண்ணாடிகளை அமோனியா கலந்த தண்ணீரால் கழுவினால் பெயின்ட் அல்லது பிலிம் உரிய வழி வகுத்து விடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|