பதிவு செய்த நாள்
18 ஆக2013
03:36
புதுடில்லி:இந்தியாவில், ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு மே மாதம் வரையிலுமான காலத்தில், 90.005 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 89.702 கோடியாக இருந்தது.வளர்ச்சி:ஆக, மதிப்பீட்டு மாதத்தில், தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 0.34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் தான், வரலாற்றில் முதன் முறையாக, நாட்டின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 90 கோடியை தாண்டியது. சென்ற 2012ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் தான், தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, மிகவும் அதிகபட்ச அளவாக, 96.55 கோடியை எட்டியிருந்தது. அதன் பிறகு, இந்த எண்ணிக்கை, படிப்படியாக குறையத் துவங்கியது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான், இரண்டாவது முறையாக தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 90 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற மே மாதத்தில், 87 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 86.70 கோடியாக இருந்தது.
அலைபேசி:ஆக, மதிப்பீட்டு மாதத்தில், அலைபேசி சேவை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 0.37 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற மே மாதத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 12 லட்சம் புதிய வாடிக்கை யாளர்களை ஈர்த்து, முதல் இடத்திலுள்ளது. இதையடுத்து, வோடபோன் ( 9 லட்சம்), ஏர்டெல் (8.51 லட்சம்), ஏர்செல் ( 2.77 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மதிப்பீட்டு மாதத்தில், வீடியோகான் நிறுவனத்தின் அலைபேசி சேவையை பெறும் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை, 6.79 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
பீ.எஸ்.என்.எல்.,:இதையடுத்து, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 22.85 லட்சத்தை எட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 21.39 லட்சமாக இருந்தது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் முறையே, 9 லட்சம் மற்றும் 97,583 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
இதையடுத்து, மேற்கண்ட நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே, 9.80 கோடி மற்றும் 48 லட்சம் என்ற அளவில், சரிவை கண்டுள்ளது.ஒட்டு மொத்த அளவில், அலை பேசி சேவையில் அதிக வாடிக்கை யாளர்களை கொண்ட நிறுவனமாக, ஏர்டெல் விளங்குகிறது. இந்நிறுவனம், 18.96 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, வோடபோன் நிறுவனம், 15.46 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.ரிலையன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே, 12.48 கோடி மற்றும் 12.37 கோடி என்ற அளவில் உள்ளது.
மே மாத கணக்கீட்டின்படி, ஒட்டு மொத்த, 87 கோடி அலைபேசி இணைப்புகளில், 72.70 கோடி இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாக 'டிராய்' தெரிவித்துள்ளது.தொலைபேசி:லேண்ட் லைன் எனப்படும், சாதாரண தொலைபேசி வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை, சென்ற மே மாதத்தில், 2.98 கோடியாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 2.99 கோடியாக உயர்ந்து காணப்பட்டது.குறிப்பாக, பீ.எஸ்.என்.எல்., நிறுவனம், இப்பிரிவில், 1.49 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதேசமயம், வோடபோன் நிறுவனம், 3,510 புதிய தொலைபேசி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
அகண்ட அலைவரிசை:சென்ற மே மாதத்தில், பிராட்பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை சேவை பெற்றுள்ளோர் எண்ணிக்கை, 0.23 சதவீதம் உயர்ந்து, 1.50 கோடியிலிருந்து, 1.51 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த ஓர் ஆண்டில், இப்பிரிவில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 5.75 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.பீ.எஸ்.என்.எல். நிறுவனம், அகண்ட அலைவரிசை சேவையில், 99.60 கோடி இணைப்புகளைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஏர்டெல் (14 லட்சம்), எம்.டி.என்.எல்., (11 லட்சம் ), ஹாத்வே (3.6 லட்சம்), யூ பிராட்பேண்ட் (3.1 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.சென்ற மே மாதத்தில், எம்.என்.பி., எனப்படும் அலைபேசி எண் மாறாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும் திட்டத்தின் கீழ், 10 சதவீதம் அதாவது, 9.3 கோடி வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|