பதிவு செய்த நாள்
18 ஆக2013
03:39
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை, அதிரடியாக சவரனுக்கு, 1,888 ரூபாய் அதிகரித்து உள்ளது.மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்நிலையிலும், தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,881 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,048 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 2,946 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 23,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 695 ரூபாய் உயர்ந்து, 31,505 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 55.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 51,630 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,710 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,680 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 236 ரூபாயும், சவரனுக்கு, 1,888 ரூபாயும் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ""சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. மேலும், சீனா போன்ற வளர்ந்த நாடுகள், தங்களிடம் உபரியாக உள்ள, அன்னிய செலாவணியை, தங்கமாக மாற்றி வருவதால், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|