பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:54
இந்தியாவில், சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடுமையாக சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மே மாதம் முதல், இது வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 16 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
நேற்று மதியம், அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, அதிகபட்சமாக, 65.65 வரை சென்றது. மாலை, வர்த்தகம் முடிவடையும் போது, முந்தைய நாள் வர்த்தக மதிப்பை விட, 59 காசுகள் குறைந்து, 64.63ல் நிலை பெற்றது.அன்னிய செலாவணிநாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதுடன், அன்னியச் செலாவணி வரத்து குறைந்து போயுள்ளது தான், ரூபாய் மதிப்பின் சரிவிற்கு முக்கிய கார ணம்.செலாவணி வரத்து குறைந்ததை அடுத்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2012 - 13ம் நிதியாண்டில், 4.8 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.12 லட்சம் கோடி ரூபாயாகும்.அமெரிக்காவின் மத்திய வங்கி, மாதந்தோறும், 8,500 கோடி டாலர் மதிப்பிற்கு வாங்கி வரும் கடன் பத்திரங்களை, படிப்படியாக குறைக்கும் என, அறிவித்தது. அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பை, அமெரிக்கா ஏற்படுத்தி கொடுத்ததால், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் மேற்கொண்ட முதலீட்டை, திரும்ப பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன. மேலும், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டையும் விலக்கிக் கொண்டு வருகின்றன. இதனால், அதிக அளவில் அன்னியச் செலாவணி வெளியேறுகிறது.
செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், பல்வேறு நாடுகளின் செலாவணி மதிப்பிற்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, சரிவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான இறக்குமதி செலவு, அதிகரித்து வருகிறது. இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட, பல்வேறு அத்தியாவசியமற்ற பொருள்களின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திஉள்ளது. சுங்க வரி தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான சுங்க வரியை, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது. இருந்தபோதிலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இறக்குமதி செலவினம் அதிகரிப்பதால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்கிறது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. பங்கு வர்த்தகம் சரிவு நிலை இந்நிலையில், நாட்டின் பங்கு வர்த்தகம், சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 1,500 புள்ளிகளை இழந்துள்ளது.பங்கு வர்த்தகம் நல்ல நிலையில் இல்லாததால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், மேற்கொள்ளும் முதலீட்டை குறைத்துள்ளதுடன், அதிக அளவில் தொகையை திரும்பப் பெற்றுள்ளன. சங்கிலித் தொடர் போன்ற இத்தகைய நிகழ்வுகள், ரூபாய் வீழ்ச்சிக்கு, வழி கோலுவதாக உள்ளன.ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தபோதிலும், அவை எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை. கடந்த வார நிலவரப்படி, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 27,860 கோடி டாலராக உள்ளது. இதன் கையிருப்பு நன்கு உள்ளது என்றாலும், ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து நிறுத்த, ரிசர்வ் வங்கி, அதிக அளவில், கையிருப்பில் இருந்து டாலரை விற்பனை செய்கிறது.
இதே நிலை நீடித்தால், செலாவணி கையிருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைய வழி கோலும். தங்கம் அடமானம் மத்திய அரசு, அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் வகையில், சர்வதேச நிதியத்திடம் , நம் நாடு இருப்பு வைத்துள்ள, 200 டன் தங்கத்தை அடமானம் வைத்து, அதன் வாயிலாக, 2,300 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இதனிடையே, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 70 வரை சரிவடைய வாய்ப்பு உள்ளதாக, டாய்சு வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் கவர்னர் டி.சுப்பா ராவ், பருவ மழை நன்கு பெய்து வருவதாலும், அரசின் நடவடிக்கையாலும், பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என, தெரிவித்து உள்ளார். -நமது நிருபர்-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|