பதிவு செய்த நாள்
24 ஆக2013
17:24
புதுடில்லி: ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில் வாகன ஏற்றுமதி வாயிலான அன்னியச் செலாவணி வருவாய் சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 6.2 சதவீதம் சரிந்து 181 கோடி டாலராக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 193 கோடி டாலராக உயர்ந்திருந்தது. கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் பிரபுல் படேல் பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் தருகையில் இதனை அறிவித்தார். உள்நாட்டில் வாகன விற்பனை பல மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து வந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிடம் கனரக வாகனங்களுக்கான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளன. தற்போது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சென்ற ஜூலை மாதத்தில் பயணிகள் கார் மற்றும் ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி முறையே 12.10 சதவீதம் மற்றும் 33.79 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, இனிவரும் மாதங்களில் ஏற்றுமதி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|