பதிவு செய்த நாள்
25 ஆக2013
00:18
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வரவும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து நிறுத்திடவும், அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காகவும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று, மும்பையில் நிதியமைச்சக அதிகாரிகள், முக்கிய வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்த தகவல்களை அவர், பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அன்னிய முதலீட்டை கவரும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக, அதில் கலந்து கொண்ட வங்கியாளர்கள் தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் நிதி அமைச்சருடன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம், நிதித்துறை செயலர் ராஜீவ் தக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், எச்.டீ.எப்.சி வங்கி யின் ஆதித்ய பூரி, சிட்டி வங்கி குழுமத்தின் பிரமிட் ஜவேரி, பேங்க் ஆப் இந்தியாவின் விஜயலட்சுமி ஐயர், கனரா வங்கியின் ஆர்.கே. துபே மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் அனுராக் அடல்கா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ரூபாய் மதிப்பின் சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பது, செலாவணி வரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், அன்னிய முதலீடு வெளியேறுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் ஏற்றுமதியை விட,இறக்குமதி அதிகரிப்பதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரிக்கிறது.ஏற்றுமதியை உயர்த்தி,இறக்குமதியை குறைக்கும் வகையில் மத்திய அரசு,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பி னும் ரூபாய் மதிப்பு, நடப்பு ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரையில்,16 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து,சந்தாகோச்சார் கூறியதாவது:இக்கூட்டம் மிகவும் பயன்அளிப்பதாக இருந்தது. அன்னிய முதலீட்டை கவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து நிறுவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இக் கூட்டத்திற்கு பின்,நிதி அமைச்சர் சிதம்பரம், அன்னிய முதலீட்டாளர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|